UPDATED : ஆக 22, 2024 11:38 PM
ADDED : ஆக 22, 2024 11:27 PM

சென்னை,: அமைச்சர்கள் இனிமேல் அதிகாரிகளை தன்னிச்சையாக இட மாறுதல் செய்ய முடியாது. ஒவ்வொரு அமைச்சரும் தன் துறையில் உள்ள அதிகாரிகளை மாற்ற விரும்பினால், முறைப்படி முதல்வரிடம் கோரிக்கை வைத்து அனுமதி பெற வேண்டும்.
தமிழக அரசு நிர்வாகத்தில், 300 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளனர். தலைமை செயலர், முதல்வரின் செயலர்கள், துறைகளின் செயலர்கள், இயக்குனர்கள், கலெக்டர்கள், கமிஷனர்கள் போன்ற பல்வேறு பதவிகளை இவர்கள் வகிக்கின்றனர்.
ஐ.ஏ.எஸ்., அல்லாத அதிகாரிகள் துணை செயலர், இணை இயக்குனர், துணை இயக்குனர், துணை கமிஷனர், முதன்மை தலைமை பொறியாளர், தலைமை பொறியாளர் போன்ற பொறுப்புகளில் உள்ளனர்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பதவி உயர்வு பட்டியல், தலைமை செயலர் வாயிலாக தயாரிக்கப்பட்டு, முறையாக முதல்வரிடம் அனுமதி பெற்று வெளியிடப்படுகிறது.
ஆனால், ஐ.ஏ.எஸ்., அல்லாத உயர் பதவிகளுக்கு, அமைச்சர்களின் பரிந்துரைப்படி, அந்தந்த துறையின் செயலர் வாயிலாக பதவி உயர்வு, பணியிட மாற்றம் வழங்கப்படுகிறது.
பணியிட மாற்றம் செய்யும்போது, சிலருக்கு செல்வாக்கான பதவி கிடைக்கிறது. பசையான பதவி என்றும் சொல்வதுண்டு. மற்றவர்களுக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை. உரிய தகுதி இருந்தும், பலர் செல்வாக்கு இல்லாத பொறுப்புகளில் நியமிக்கப்படுகின்றனர். அதை 'டம்மி' பதவி என்கின்றனர்.
அமைச்சருக்கு எல்லா வகையிலும் அனுசரணையாக நடந்து கொள்ளும் அதிகாரிகளுக்கு பரிசாக நல்ல பதவி தரப்படுகிறது; எதற்கும் வளைந்து கொடுக்காத அதிகாரிகள் டம்மி போஸ்டிங்கில் தண்டிக்கப்படுகின்றனர் என்ற கருத்து நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.
ஆட்சி மாற்றங்களால் பெரிய வித்தியாசம் ஏற்படுவதில்லை என்பது கோட்டையில் நிலவும் கருத்து. இந்த அணுகுமுறையால் நேர்மையான அதிகாரிகள் அரசு மீதும், பணியின் மீதும் அதிருப்தி அடைகின்றனர்.
இந்நிலையில், ஐ.ஏ.எஸ்., அல்லாத உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, பணியிட மாற்றம் வழங்குவதற்கும் முன் அனுமதி பெற வேண்டும் என, முதல்வர் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல்வரின் மூன்று செயலர்கள், இணை செயலர்களுக்கு, சமீபத்தில் துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இவர்கள் வாயிலாக, துறையின் செயலர்களுக்கு, இந்த வாய்மொழி உத்தரவு போயிருக்கிறது.
பதவி உயர்வு வழங்குதல் மற்றும் பணியிட மாற்றம் செய்தல் ஆகியவற்றில் இதுவரை செலுத்திய அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதால், அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ஒரு சீனியர் அமைச்சரின் நடவடிக்கைகளே இந்த நிலைக்கு காரணம் என சக அமைச்சர்கள் நம்புகின்றனர். ஆனால், முதல்வரின் செயலர்கள் பிறப்பித்துள்ள இந்த ரகசிய உத்தரவு, அதிகாரிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
முதல்வரின் செயலர்கள் விரைவில் அனைத்து துறைகளின் செயலர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவித்தன.