சீனியர் அமைச்சர்கள் சிலருக்கு கல்தா தரும்படி உதயநிதி... நிர்பந்தம்!
சீனியர் அமைச்சர்கள் சிலருக்கு கல்தா தரும்படி உதயநிதி... நிர்பந்தம்!
UPDATED : செப் 23, 2024 12:56 AM
ADDED : செப் 22, 2024 11:46 PM

சென்னை: 'நான் துணை முதல்வராக பதவியேற்க வேண்டும் என்றால், சீனியர் அமைச்சர்கள் சிலருக்கு 'கல்தா' கொடுக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, அமைச்சர் உதயநிதி நிர்பந்தம் கொடுத்து வருவதாகவும், அதன் காரணமாகவே, அமைச்சரவை மாற்றம், துணை முதல்வர் அறிவிப்பு தள்ளிப்போவதாகவும் தி.மு.க., வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அப்போது, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா; அமைச்சரவை மாற்றப்படுமா என்ற கேள்விக்கு, 'வெயிட் அண்டு சீ' என, ஒரு வரியில் பதில் அளித்தார்.
எதிர்பார்ப்பு
அமெரிக்க பயணத்தை முடித்து சென்னை திரும்பிய போதும், அதே கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்' என்றார். இதையடுத்து, உதயநிதி துணை முதல்வராவார்; சில அமைச்சர்களும் மாற்றப்படுவர் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அமைச்சரவை மாற்றம்; துணை முதல்வர் பதவி அறிவிப்பு தள்ளிப்போகிறது. இதற்கு, உதயநிதியின் நிர்பந்தமே காரணம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், அரசிலும் முக்கிய துறைகளின் அமைச்சர்களாக கோலோச்சுகின்றனர்.
இந்த சூழ்நிலையில், தான் துணை முதல்வரானால், அவர்கள் எல்லாம் நம் சொல்படி நடப்பரா; அவர்களிடம் வேலை வாங்க முடியுமா என்ற சிந்தனையில் அமைச்சர் உதயநிதி உள்ளார்.
அதனால், இளைஞர்கள் பலரை அமைச்சர்களாக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அந்த இளைஞர் படையை முடுக்கி விட்டு, தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் நம்புகிறார்.
அதனால், 'மூத்த அமைச்சர்கள் சிலருக்கு கல்தா கொடுக்க வேண்டும்; அப்போது தான், துணை முதல்வராக பொறுப்பேற்பேன்' என, முதல்வர் ஸ்டாலினிடம் உதயநிதி நிர்பந்தம் செய்து வருகிறார்.
கருத்து கேட்டார்
இந்த பிரச்னை குறித்து, மூத்த அமைச்சர்கள் சிலரின் கருத்தை ஸ்டாலின் கேட்டுள்ளார். அப்போது, உதயநிதி துணை முதல்வராக மூத்த அமைச்சர்கள் பச்சைக்கொடி காட்டிஉள்ளனர்.
இருப்பினும், தங்களின் அமைச்சர் பதவி பறிபோவதை அவர்கள் விரும்பவில்லை. அடுத்த சட்டசபை தேர்தல் வரை, அமைச்சராக தொடர அனுமதியுங்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், அ.தி.மு.க.,விடம் இருந்து ஆட்சியை மீட்க, கடந்த சட்டசபை தேர்தலின் போது, தற்போது அமைச்சர்களாக இருக்கும் பலர் தான், பணத்தை வாரி இறைத்துள்ளனர்.
அதன்பின், லோக்சபா தேர்தல் வெற்றிக்கும் அவர்கள் வகுத்த வியூகமே உதவியுள்ளது.
மேலும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களையும், மாவட்ட செயலர்களையும் சரிக்கட்ட, மூத்த அமைச்சர்களே சரியான ஆட்கள் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியாக நம்புகிறார்.
எனவே, உதயநிதி குறிப்பிடும் மூத்த அமைச்சர்கள், அமைச்சரவையில் தொடர வேண்டும் என்பதே அவரது விருப்பம். இதற்காக, உதயநிதியின் மனதை மாற்றும் முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார்.
அதாவது, 'கருணாநிதி முதல்வராக இருந்த போது, நான் துணை முதல்வராக இருந்தேன். அப்போது, கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் அமைச்சரவையில் இருந்தனர்.
'அவர்கள் எல்லாம் என்னை அரவணைத்து சென்று தான் பணிகளை செய்தனர். அதேபோல, உனக்கும் ஒத்துழைப்பு வழங்க, மூத்த அமைச்சர்கள் தயாராக உள்ளனர்' என, உதயநிதியிடம் ஸ்டாலின் கூறியுள்ளார்.
லட்சியம்
அதுமட்டுமின்றி, வரும் 2026 சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது முதல்வரின் லட்சியம்.
அந்த லட்சியத்திற்கு இடையூறாக அமைச்சரவை மாற்றமும், மூத்த தலைவர்களுக்கு கல்தா கொடுப்பதும் அமைந்து விடக்கூடாது என்றும் ஸ்டாலின் நினைக்கிறார்.
அதனால், உதயநிதியை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. அவர் சமரசம் அடையும் பட்சத்தில், அமைச்சரவை மாற்றம் மற்றும் துணை முதல்வர் குறித்த அறிவிப்பு, எந்த நேரத்தில் வெளியாகலாம்.
இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் கூறின.