தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் வேகமெடுக்கிறது சிக்குன் குனியா: கொசு ஒழிப்பு பணி முடங்கியதால் பாதிப்பு
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் வேகமெடுக்கிறது சிக்குன் குனியா: கொசு ஒழிப்பு பணி முடங்கியதால் பாதிப்பு
UPDATED : ஜன 22, 2026 10:56 PM
ADDED : ஜன 22, 2026 10:46 PM

- நமது நிருபர் -
தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு பணி முடங்கியதால், 20 ஆண்டுகளுக்கு பின் சிக்குன் குனியா பாதிப்பு அதிகரித்து உள்ளது.
நன்னீரில் வளரக்கூடிய, 'ஏடிஸ்' வகை கொசுக்கள் வாயிலாக சிக்குன் குனியா நோய் பரவுகிறது. இந்நோய் வந்தால் காய்ச்சல், மூட்டு வலி, அதீத தசை வலி, உடல் அசதி போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவை, இளைஞர்களைவிட முதியோருக்கு கடுமையான மூட்டு வலி பாதிப்பை வெகு நாட்கள் ஏற்படுத்தக்கூடியது.
தமிழகத்தில், 2003 முதல் 2005ம் ஆண்டு வரை, சிக்குன் குனியா பாதிப்பு தீவிரமாக இருந்தது. அடுத்தடுத்த ஆண்டு களில் சிக்குன் குனியா குறைந்து, சில பகுதிகளில் மட்டுமே ஓரிருவர் பாதிக்கப்படும் நிலை இருந்தது. ஆனால், 2025 இறுதி மாதங்களில், 'உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டங்களை அரசு செயல்படுத்தியது. இப்பணிகள் மட்டுமின்றி, அதற்கு அடுத்து வந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளிலும், கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
கொசு ஒழிப்பு பணியாளர்கள், மாற்று பணிக்கு பயன்படுத்தப்பட்டதால் மாநிலம் முழுதும் கொசு ஒழிப்பு பணி முடங்கியது. எனவே, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், 20 ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தில் சிக்குன் குனியா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.
இது குறித்து, பொது சுகாதாரத்துறை நிபுணர் குழந்தைசாமி கூறுகையில், ''சிக்குன் குனியா பாதிப்பு ஏற்பட்டோருக்கு, அதன்பின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருக்கும்.அவர்களுக்கு மீண்டும், 40 ஆண்டுகளுக்கு பின் சிக்குன் குனியா ஏற்பட வாய்ப்புள்ளது. அதேநேரம், பாதிக்கப்படாதவர்களுக்கும் சிக்குன் குனியா ஏற்பட வாய்ப்புள்ளது,” என்றார்.

