தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன்
சுந்தரபாண்டி இயக்கத்தில் ஆரி நடித்துள்ள திரில்லர் படமான “4த் ப்ளோர்” பிப்., 27ல் ரிலீஸாகிறது. இப்பட நிகழ்வில் பேசிய இயக்குனர் சேரன், ''ஒரே நேரத்தில் பல படங்கள் ரிலீஸாவதால் பல தயாரிப்பாளர்களுக்கு பிரச்னை வருகிறது. மனசாட்சியை அடகு வைத்து தயாரிப்பாளர்களை சில இயக்குனர்கள் குழியில் தள்ளுகிறார்கள். சின்ன படங்களுக்கு 3 மாதமும், மற்ற படங்களுக்கு பிற மாதங்களையும் தியேட்டர்களில் ஒதுக்கணும்'' என்றார்.
மீண்டும் இளவரசி வேடத்தில் ருக்மணி
தென்னிந்திய சினிமாவில் கவனிக்கப்படும் நாயகியாக மாறி உள்ளார் ருக்மணி வசந்த். 'டாக்ஸிக்' படத்தில் நடித்திருப்பவர் அடுத்து ஜுனியர் என்டிஆர் படத்தில் நடிக்கிறார். புதிதாக தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சீனு வைத்லா இயக்குகிறார். ஆக் ஷன் கலந்த பிரீயட் படமாக உருவாகும் இதில் 'காந்தாரா 2' படத்திற்கு பின் மீண்டும் இளவரசி வேடத்தில் நடிக்கிறார்.
பிப்ரவரி மாதம் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்
ஜனநாயகன் படம் வராததால் சோகத்தில் இருக்கும் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்த பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்கின்றனர். ஏற்கனவே ரீ ரிலீஸாகி வரவேற்பை பெற்ற 'கில்லி' படத்தை மீண்டும் பிப்., 20லும், 'தெறி' படத்தை பிப்., 27லும் வெளியிடுகின்றனர். ஜனநாயகன் படம் தேர்தல் முடிந்த பிறகே வெளியாகும் என தெரிகிறது.
தேடிச் சென்று வாய்ப்பு கேட்ட மிருணாள்
ரவி உதய்வர் இயக்கத்தில் ஹிந்தியில் மிருணாள் தாக்கூர் நடித்துள்ள 'தோ தீவானே சேஹெர் மெய்ன்' படம் நாளை ரிலீஸாகிறது. இவர் கூறுகையில், ''மாம் படம் பார்த்துவிட்டு ரவி உதய்வரிடம் நாம் இணைந்து பணியாற்றணும் என்றேன். அது இப்போது நடந்துவிட்டது. அதே போல் 'துரந்தர்' படம் பார்த்துவிட்டு இயக்குனர் ஆதித்யா தர்ரிடம் நேரில் சந்தித்து வாய்ப்பு கேட்டுள்ளேன். இப்படி கேட்க ஒருபோதும் வெட்கப்படவில்லை'' என்கிறார்.
'ஏழுமலை 2' பணியில் அர்ஜூன்
நடிகர் அர்ஜூன் இயக்கம், நடிப்பில் 2002ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'ஏழுமலை'. சிம்ரன், மும்தாஜ், கஜாலா உள்ளிட்டோர் நடித்தனர். 24 ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை தற்போது அர்ஜூன் மேற்கொண்டுள்ளார். விரைவில் இதில் நடிப்பவர்கள் பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட உள்ளார்.
இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா...
நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் ஷா ரா. இவர் வெளியிட்ட வீடியோவில், ''4 மணிக்கு துாக்கமில்லாமல் சுற்றுகிறேன். இப்பலாம் படம் பேசுபவர்கள் இன்ஸ்டாவில் உங்களுக்கு எவ்வளவு பாலோயர்கள் உள்ளனர் என கேட்கின்றனர். அதை வைத்து தான் சம்பளமே பேசுகின்றனர். நான் எப்படி அதை அதிகப்படுத்துவது. என்கிட்ட கவர்ச்சி இல்லையே, மொழுமொழுனு கன்னமில்லை, தாடி தான் இருக்கு. ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்க'' என நகைச்சுவை கலந்த புலம்பலை வெளிப் படுத்தி உள்ளார்.
தயாரிப்பாளரானார் நித்யா மேனன்
தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன். நடிப்பு தாண்டி சில பாடல்கள் பாடியிருப்பவர் அடுத்து கேயுரி புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி உள்ளார். இவர் கூறுகையில், ''நான் நடிக்க துவங்கியது முதல் இது எனது செயல்முறை நோக்கமாக இருந்தது. இப்போது நடந்துள்ளது. படங்களை உருவாக்குவது என்பது பெரும் கதைகளை சொல்வதை விட மேலானது. ஒரு மாற்றத்தை தூண்டுவது'' என்கிறார்.

