sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் வழக்கு சி.ஐ.எஸ்.எப்., அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

/

 திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் வழக்கு சி.ஐ.எஸ்.எப்., அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

 திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் வழக்கு சி.ஐ.எஸ்.எப்., அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

 திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் வழக்கு சி.ஐ.எஸ்.எப்., அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு


ADDED : டிச 06, 2025 01:59 AM

Google News

ADDED : டிச 06, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றப்படாதது குறித்து, மனுதாரர்களுடன் பாதுகாப்புக்காக சென்ற சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, ஹிந்து தமிழர் கட்சியைச் சேர்ந்த ராம ரவிகுமார் தாக்கல் செய்த மனு மீது, டிச., 1ல், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், 'வழக்கமான இடங்களை தவிர, தீபத்துாணிலும் கார்த்திகை தீபத்தை கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும்.

'தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்வது போலீசாரின் கடமை' என, குறிப்பிட்டார்.

அவமதிப்பு வழக்கு ராம ரவிக்குமார், 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை இல்லாததால் கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை அவசர வழக்காக, டிச., 3ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை. பிற மனுதாரர்கள் உட்பட 10 பேரை மனுதாரர் அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை அனுப்ப உயர் நீதிமன்ற சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிற்கு உத்தரவிடுகிறேன்.

இவ்வாறு உத்தர விட்டார்.

இதை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு டிச., 4ல் தள்ளுபடி செய்தது.

இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, டிச., 4ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'கார்த்திகை தீபத்தை தீபத்துாணில் ஏற்ற வேண்டும். போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இதை நிறைவேற்றியது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பழனிவேல்ராஜன், வழக்கறிஞர்கள் அருண்சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார் ஆகியோரது வாதத்தில், 'இந்நீதிமன்ற உத்தரவை அரசு தரப்பு நிறைவேற்றவில்லை.

''தீபம் ஏற்ற சென்றவர்களை போலீஸ் துணை கமிஷனர் தடுத்தார். ஆட்சேபகரமான வார்த்தைகளை பயன்படுத்தினார். இவ்வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை ஒரு தரப்பாக இணைத்துக்கொள்ள வேண்டும்' என்றனர்.

இதையடுத்து நீதிபதி, 'இவ்வழக்கில் கோரிய நிவாரணத்திற்கு அப்பால் மேலும் விரிவாக செல்ல வேண்டாம்,' என்றார்.

தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ''அவமதிப்பு வழக்கில் இந்நீதிமன்ற இடைக்கால உத்தரவிற்கு எதிராக தாக்கலான மனுவை, இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.

''இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என, ரிட் மனுவில் உத்தரவிட்டதை எதிர்த்து, அரசு தரப்பில் உயர் நீதிமன்ற கிளை இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

ஒத்திவைப்பு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், 'டிச., 3ல் திருப்பரங்குன்றத்தில் நடந்த விவகாரம் தொடர்பாக, 24 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். 12 பேரை கைது செய்தனர். டிச., 4ல் 300 பேரை கைது செய்தனர். அவர்களை சொந்த ஜாமினில் விடுவித்தனர். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது சட்டத்திற்கு புறம்பானது' என்றனர்.

இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டதால், அவமதிப்பு வழக்கு விசாரணை டிச., 9க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

இந்நீதிமன்றம் டிச., 3ல் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற, மனுதாரர்களுடன் சென்ற சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிடமிருந்து அறிக்கை பெற்று, மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரல் டிச., 9ல் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us