தொடர்ந்து 9ம் முறையாக பட்ஜெட் தாக்கல்; நிர்மலா சீதாராமன் சாதனை
தொடர்ந்து 9ம் முறையாக பட்ஜெட் தாக்கல்; நிர்மலா சீதாராமன் சாதனை
UPDATED : பிப் 01, 2026 11:34 AM
ADDED : பிப் 01, 2026 11:01 AM

- நமது நிருபர் -
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பார்லியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். இது, அவர் தாக்கல் செய்த 9வது பட்ஜெட் ஆகும்.
இவர், 2019ம் ஆண்டு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். 2024ம் ஆண்டு மட்டும் இடைக்கால பட்ஜெட், ரெகுலர் பட்ஜெட் என இரண்டு முறை தாக்கல் செய்துள்ளார். அந்த வகையில், அவர் இன்று தாக்கல் செய்தது ஒன்பதாவது பட்ஜெட்.
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார்.இவர், முதல் முதலாக 1959ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தார். கடைசியாக, 1969ல் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
அடுத்த இடத்தில் தமிழகத்தை சேர்ந்த சிதம்பரம் இருக்கிறார். இவர், இதுவரை 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். இவரது சாதனையை, நிதியமைச்சர் நிர்மலா இன்று சமன் செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 5 முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
மற்ற அனைவரும், வெவ்வேறு பிரதமர்களின் பதவிக்காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தனர். நிர்மலா, ஒரே பிரதமரின் ஆட்சிக் காலத்தில், தொடர்ச்சியான ஆண்டுகளில் இந்த பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.

