ADDED : டிச 24, 2024 07:07 AM
சென்னை : 'சுதந்திரமாக தேர்தல் நடப்பதன் மீது தொடுக்கப்பட்டுள்ள, மக்களாட்சிக்கு விரோதமான தாக்குதலை எதிர்க்க, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட, அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில், தேர்தல் நடத்தை விதிகளில் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால், மக்களாட்சி மிகப்பெரும் அச்சுறுத்தலை, மத்திய பா.ஜ., அரசிடம் இருந்து எதிர்நோக்கி உள்ளது.
குறிப்பிட்ட ஓட்டுச்சாவடியின், 'கேமரா' காட்சி பதிவுகளை வழங்குமாறு, பஞ்சாப், ஹரியானா பிறப்பித்த உத்தரவை அடுத்து, கேமரா பதிவுகள் மற்றும் தேர்தல் தொடர்பான ஆவணங்கள், பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், மத்திய அரசு சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.
மத்திய பா.ஜ., அரசின் பயம், ஹரியானா மாநில தேர்தலோடு நிற்கவில்லை. மஹாராஷ்டிரா மாநிலத்தில், தேர்தலின் புனிதத்தன்மையை கெடுத்து, பெற்ற பொய்யான வெற்றி, தீவிரமான எதிர்ப்புக்கு உள்ளாகி உள்ளது. இதனால், அடைந்துள்ள பதற்றத்தின் எதிரொலிப்பாகவே, இது அமைந்துள்ளது.
நாட்டில் சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் நடப்பதன் மீது தொடுக்கப்பட்டுள்ள, மக்களாட்சிக்கு விரோதமான இந்த தாக்குதலை எதிர்க்க, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட, அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.