சிறுபான்மையினருக்கு ரூ.75 கோடி கடன் சர்ச், தர்காவுக்கு வழங்கினார் முதல்வர்
சிறுபான்மையினருக்கு ரூ.75 கோடி கடன் சர்ச், தர்காவுக்கு வழங்கினார் முதல்வர்
ADDED : டிச 14, 2024 02:36 AM

சென்னை:சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 75 கோடி ரூபாய் கடன் வழங்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில், சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரில் உள்ள துாய இருதய ஆண்டவர் திருத்தலம் புனரமைப்பு பணிக்கு, 1.55 கோடி ரூபாய் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
அதில், முதல் தவணையாக, 77.6 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். திருச்சி மாவட்டம் லால்குடியில் செயல்பட்டு வரும் துாய இருதய ஆண்டவர் தேவாலயம் மற்றும் சென்னை அயனாவரத்தில் உள்ள நல்மேய்ப்பர் லுத்தரன் திருச்சபை ஆகியவற்றை புனரமைக்க, தலா, 20 லட்சம் ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதில், முதல் தவணையாக தலா, 15 லட்சம் ரூபாயையும் முதல்வர் வழங்கினார்.
மசூதிகள் மற்றும் தர்காக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில், முத்துபேட்டை தர்காவுக்கு முதல் தவணையாக, 58.1 லட்சம்; கடலுார் மாவட்டம் பண்ருட்டி தர்காவுக்கு, 58.1 லட்சம்; பரங்கிபேட்டை தர்காவுக்கு, 73.7 லட்சம் ரூபாயை, முதல்வர் வழங்கினார்.
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக கடன் வழங்கும் திட்டம் வாயிலாக, நடப்பாண்டு, 75 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, சுய தொழில் செய்வதற்கு தனிநபர் கடனாக இரண்டு பேருக்கு, 3.80 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், வக்ப் வாரிய தலைவர் நவாஸ்கனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.