பொருநை அருங்காட்சியகத்தை பார்க்க பிரதமர் மோடி நேரில் வர வேண்டும் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
பொருநை அருங்காட்சியகத்தை பார்க்க பிரதமர் மோடி நேரில் வர வேண்டும் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
ADDED : டிச 22, 2025 02:12 AM

திருநெல்வேலி: “கீழடி, பொருநை அருங்காட்சியகத்தை நேரில் வந்து பாருங்கள்,” என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
திருநெல்வேலியில், நேற்று நடந்த பொருநை அருங்காட்சியக திறப்பு மற்றும் திட்டப் பணிகள் துவக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
திருநெல்வேலியில், கடந்த 1991-ல் நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர் தீ விபத்தில் எரிந்தது. தற்போது புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரியில் புதிய தேர் ஓடும்.
'பொருநை அருங்காட்சியகம்' தமிழரின் பெருமை. இனிமேல் தமிழ் நிலத்திலிருந்து தான் இந்தியாவின் வரலாறு, எழுதப்பட வேண்டும்.
கீழடி உள்ளிட்ட அகழாய்வுகளுக்கு, மத்திய பா.ஜ.,அரசு எப்படியெல்லாம் தடை போடுகிறது என்பதை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம்.
கடந்த 2021ல், மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லுார் அருங்காட்சியகம் அறிவிக்கப்பட்டது. இன்றுவரை அந்த பணிகள் துவங்கவில்லை. பிரதமர் மோடியையும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் நான் அன்புடன் அழைக்கிறேன். கீழடி, பொருநை அருங்காட்சியகத்தை நேரில் வந்து பாருங்கள்.
காந்தி பெயர் நீக்கப்பட்டு, 100 நாள் வேலைத் திட்டம் சிதைக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை, ஒற்றுமை என்ற சொற்களே பா.ஜ.,வுக்கு பிடிக்காதவை. 10 ஆண்டுகளாக, இந்தத் திட்டத்தை பல்வேறு வழிகளில் சிதைத்துள்ளனர். இனிமேல் மாநில அரசு 40 சதவீதம் நிதி தர வேண்டும் என புதிய சுமையை திணித்துள்ளனர்.
வரும் 24ல், 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்தியதற்கு எதிராக, தி.மு.க., தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
ஆனால், இது குறித்து மூச்சுக்கூட விடாமல் இருப்பவர், போலி விவசாயி பழனிசாமி. 'நான் தான் விவசாயி' என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதைத் தவிர, விவசாயிகளின் உரிமை பறிக்கப்படும்போது அவர் வாய் திறப்பதே இல்லை.
குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, எந்த முஸ்லிம் பாதிக்கப்பட்டார் என்று மனசாட்சி இல்லாமல் கேட்டவரும் பழனிசாமி தான். மத்திய அரசை எதிர்க்க துணிச்சல் இல்லாமல், அநியாயத்திற்கு துணை போகும் அவரது செயலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
திராவிட மாடல் அரசு வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை இந்தியாவின் பல மாநிலங்கள் பின்பற்ற துவங்கியுள்ளன.
பா.ஜ., ஆளும் சில மாநிலங்களில் கொடுத்ததை திரும்ப கேட்கின்றனர். ஆனால், நாம் கூடுதலாக வழங்குகிறோம்; திரும்ப கேட்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

