உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறும் முதல்வர் ஸ்டாலின்: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறும் முதல்வர் ஸ்டாலின்: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
ADDED : டிச 10, 2024 01:57 PM

சென்னை: 'அ.தி.மு.க., எம்.பி., தம்பித்துரை சுரங்க மசோதாவை ஆதரித்து பேசியதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை, சட்டசபை வளாகத்தில் இ.பி.எஸ்., நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டங்ஸ்டன் சுரங்கத்தை தடுக்க ஆரம்பத்திலேயே தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அ.தி.மு.க., மீது குறை கூறி திசை திருப்பும் செயலில் தி.மு.க., ஈடுபடுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் யாருக்கும் வேண்டுமானாலும் சுரங்க உரிமை கொடுக்கப்பட்டது. டங்ஸ்டன் சுரங்கத்தை தடுக்க ஆரம்பத்திலேயே தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அ.தி.மு.க., எம்.பி., தம்பித்துரை சுரங்க மசோதாவை ஆதரித்து பேசியதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஏல முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்பதால் வரவேற்பதாக தம்பித்துரை தெரிவித்தார். தமிழகத்தில் அனுமதியின்றி கனிம வளங்கள் சுரண்டப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
100 நாட்கள்
முன்னதாக, சட்டசபையில், கூட்டத்தொடர் குறித்து, பல்வேறு கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும் இ.பி.எஸ்., குறிப்பிட்டார். அவர் பேசியதாவது: குறைந்த நாட்களே சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது; மக்கள் பிரச்னையை எப்படி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு, 100 நாட்கள் சபை கூட்டம் என்று கூறியிருந்தனர். அப்படி பார்த்தால், 400 நாட்கள் கூட்டம் நடந்திருக்க வேண்டும். ஆனால், 119 நாட்கள் தான் கூட்டம் நடந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

