நாகை மீனவர்களை மீட்க வேண்டும்! மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
நாகை மீனவர்களை மீட்க வேண்டும்! மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
ADDED : அக் 28, 2024 07:04 PM

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ள நாகை மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் விவரம் வருமாறு;
இந்திய மீனவர்கள், இலங்கை அதிகாரிகளால் தொடர்ந்து கைது செய்யப்படுவதால் இந்தியா-இலங்கை இடையிலேயான ஆக்கபூர்வமான தூதரக முயற்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு முக்கியப் பிரச்னையாக மாறியுள்ளது. மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது, இந்தியாவில்,குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பிற்குக் கடுமையான அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 26-10-2024 அன்று IND-TN-06-MM-5102 என்ற பதிவெண் கொண்ட படகில் மீன் பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2024ம் ஆண்டில் மட்டும் இது போன்று 30 சம்பவங்கள் நடந்துள்ளன. 27.10.2024 நிலவரப்படி 140 மீனவர்கள் மற்றும் 200 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசு வசம் உள்ளன.
எனவே, இந்தப் பிரச்னையை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துச் சென்று, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதி உள்ள கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

