பொங்கல் நாளில் நடைபெறும் யு.ஜி.சி -நெட் தேர்வு தேதிகளை மாற்றுங்கள்! ஸ்டாலின் கடிதம்
பொங்கல் நாளில் நடைபெறும் யு.ஜி.சி -நெட் தேர்வு தேதிகளை மாற்றுங்கள்! ஸ்டாலின் கடிதம்
ADDED : ஜன 07, 2025 12:58 PM

சென்னை; பொங்கல் பண்டிகை நாட்களில் நடைபெறும் யு.ஜி.சி., நெட் தேர்வுகளை வேறு தேதிகளில் மாற்ற வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
இந்த ஆண்டு தமிழகத்தின் மிக முக்கியமான பண்டிகையான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை தமிழகத்தின் மிக முக்கியமான பண்டிகை. தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினராலும் அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பண்டிகை ஜனவரி 13 முதல் ஜனவரி 16 வரை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை அனைத்து தமிழ்ச் சமூகத்தினரும் நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடுவர். எனவே, இந்தப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2025 ஜனவரி 14 முதல் 17 வரை அரசு விடுமுறை நாட்களாக தமிழக அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அறுவடைத் திருவிழாவாக கொண்டாடப்படும் பொங்கல், ஒரு பண்டிகையாக மட்டுமல்லாது ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் காட்டுவதாகவும், இந்தப் பொங்கல் பண்டிகையைப் போலவே, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.
ஆகவே, திட்டமிட்டபடி பொங்கல் விடுமுறையில் யு.ஜி.சி-நெட் தேர்வை நடத்தினால், ஏராளமான தேர்வர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். இதே காரணத்திற்காக ஜனவரி 2025ல் நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர்கள் தேர்வு ஏற்கனவே மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
எனவே, யு.ஜி.சி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை வேறொரு பொருத்தமான நாட்களில் மாற்றியமைக்க தேவை உள்ளது. அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களின் மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் தேர்வுகளுக்கு எளிதில் வர இயலும். முந்தைய ஆண்டுகளில் பொங்கல் பண்டிகை காலங்களில் தேசிய தேர்வு முகமை யு.ஜி.சி-நெட் தேர்வை நடத்தவில்லை என்று தரவுகள் காட்டுகிறது.
ஆகவே, இத்தகைய சூழ்நிலையில், யு.ஜி.சி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை ஜனவரி 13 முதல் 16 வரையிலான நாட்களில் நடத்துவதைத் தவிர்த்து பொருத்தமான வேறு நாட்களுக்கு மாற்றியமைக்க வேண்டும். இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தலையிட்டு தமிழகத்தில் மற்றும் பல மாநிலங்களில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் காலங்களில் யு.ஜி.சி-நெட் தேர்வுகள் நடத்தும் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.