எஸ்ஐஆர் என்ற போர்வையில் ஓட்டுரிமை பறிப்புக்கு பீஹாரும், ஹரியானாவும் சான்று; முதல்வர் ஸ்டாலின்
எஸ்ஐஆர் என்ற போர்வையில் ஓட்டுரிமை பறிப்புக்கு பீஹாரும், ஹரியானாவும் சான்று; முதல்வர் ஸ்டாலின்
ADDED : நவ 05, 2025 07:03 PM

சென்னை; எஸ்ஐஆர் என்ற போர்வையில் மக்களின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டதற்கு பீஹாரும், ஹரியானாவும் சான்றாக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
ஹரியானாவில் ஓட்டுகள் திருடப்பட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டினார். அவரின் குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்த நிருபர்கள் சந்திப்பு ஒன்றை ராகுல் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் நேரலையாக வெளியிட்டு உள்ளார்.
அந்த பதிவை தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் மேற்கோளாக வெளியிட்டு உள்ள முதல்வர் ஸ்டாலின், ஹரியானா ஓட்டுரிமை பறிப்பு மூலம் மக்களின் தீர்ப்பை பாஜ திருடுவதாக குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவின் விவரம்;
பாஜவின் அண்மைக்கால தேர்தல் வெற்றிகளின் நம்பகத்தன்மை பற்றி மீண்டும் கடுமையான சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. ஹரியானாவில் ஓட்டுகள் திருடப்பட்டது என்று கூறி எனது சகோதரர் ராகுல் வலுவான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். இவை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.
2014ல் வெறுப்பு பிரசாரம் மற்றும் பொய் வாக்குறுதிகள் மூலம் பாஜ அதிகாரத்துக்கு வந்தது. அது முதற்கொண்டு, பாஜவின் பிரித்தாளும் அரசியலை நம்புவதை மக்கள் நிறுத்திவிட்டனர். இப்போது தேர்தல் முறைகேடுகளையும் தாண்டி, வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்து, மக்களின் தீர்ப்பை திருடுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அடுத்து, SIR என்ற பெயரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் இன்னும் ஆபத்தானது. மக்களின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டதற்கு பீஹார் சான்றாக இருக்கிறது. இன்று வெளியிடப்பட்ட ஹரியானா கோப்புகளும் அதையே காட்டுகின்றன.
கடின உழைப்பின் நாட்டு மக்கள் சம்பாதித்த பணத்தில் செயல்படும், ஒரு தன்னாட்சி அமைப்பாக இருக்க வேண்டிய தேர்தல் கமிஷன், இவ்வளவு பெரிய ஆதாரங்கள் வெளியிட்ட போதிலும் வாக்காளர்களுக்கு எந்த விளக்கத்தையும் தரவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
தேர்தல் கமிஷன் மக்களுக்கு பதில் அளிக்குமா? நாட்டின் ஜனநாயகம் இன்னும் முழுமையாக புதைக்கப்படவில்லை என்ற நம்பிக்கை மீண்டும் உயிர்ப்பிக்குமா?
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

