ADDED : ஏப் 01, 2024 06:21 PM

சென்னை: தமிழகம் ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், மத்திய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்? என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழக மக்கள் கேட்கும் கேள்வி மூன்று தான்.
1. தமிழகம் ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், மத்திய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?
2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்ட போதும், தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?
3. பத்தாண்டுகால பா.ஜ., ஆட்சியில் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?. திசை திருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர். பதில் சொல்லுங்க பிரதமர் மோடி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

