ராஜ்பவன் தேநீர் விருந்தை முதல்வர் புறக்கணிப்பார்: அமைச்சர் அறிவிப்பு அமைச்சர் அறிவிப்பு
ராஜ்பவன் தேநீர் விருந்தை முதல்வர் புறக்கணிப்பார்: அமைச்சர் அறிவிப்பு அமைச்சர் அறிவிப்பு
ADDED : ஆக 15, 2025 12:54 AM
சென்னை:'சென்னை ராஜ் பவனில் கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார்' என, உயர் கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
கும்பகோணத்தில் கலைஞர் பல்கலை அமைப்பதற்கான மசோதா, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு ஒப்புதல் அளிக்காமல், தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்து உள்ளார்.
பல்கலை சட்டம் தொடர்பாக, வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றது. பா.ஜ., நிர்வாகி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதற்கு தடை உத்தரவு பெற்றுள்ளார். அந்த தடையை நீக்க, உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுகியுள்ளது.
பா.ஜ., பிரமுகர் தெரிவித்த கருத்துகளை ஆதரிக்கும் வகையில், கவர்னர் ரவி, உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
இது அவரது அரசியல் சார்பு தன்மையை அப்பட்டமாக வெளிகாட்டுகிறது. அவரது ஒருதலைபட்சமான நடவடிக்கைக்கும், இது ஒரு உதாரணமாக விளங்குகிறது.
தமிழகத்தில் பல்வேறு பல்கலைகளில் துணை வேந்தர்கள் இல்லாமல், மாணவர்களின் உயர் கல்வி பாதிக்கப்படும் நிலைக்கு கவர்னரின்செயல்பாடுகளும், அவர் போடும் முட்டுக்கட்டைகளும்தான் காரணம்.
இந்த சூழ்நிலையில், இன்று கிண்டி கவர்னர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார்.
முதல்வர் அறிவுறுத்தல்படி, வரும், 18 மற்றும் 19ம் தேதிகளில் நடக்கவுள்ள அழகப்பா பல்கலை மற்றும் திருவள்ளுவர் பல்கலை பட்டமளிப்பு விழாக்களில், நான் பங்கேற்க போவதில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.