அமலாக்க துறை சோதனைக்கு வந்தால் டில்லிக்கு ஓடும் முதல்வர்: சீமான் ஆவேசம்
அமலாக்க துறை சோதனைக்கு வந்தால் டில்லிக்கு ஓடும் முதல்வர்: சீமான் ஆவேசம்
ADDED : மே 24, 2025 03:40 AM

திருச்சி : திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:
ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, பசி, பட்டினி, இருட்டில் திருட்டு, முறையற்ற நிர்வாகம், மணல் கொள்ளை போன்றவற்றையே தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் கொள்கையாகக் கொண்டு செயல்படுகின்றன. இதில், இரண்டு கட்சிகளுக்கும் துளி கூட வேறுபாடு கிடையாது.
அதேபோல், பா.ஜ.,வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கொடிகளில் தான் வேறுபாடு இருக்கிறது; கொள்கைகளில் வேறுபாடு இல்லை. இவர்களுக்கு மாற்றாக அவர்கள் இருப்பர் என்று கூறுவது சரியல்ல.
தமிழக மக்களிடம் இருந்து அனைத்துவிதமான வரிகளையும் எடுத்துக்கொள்ளும் மத்திய அரசு, பேரிடர் காலங்களில் தமிழக மக்களுக்கு தேவையான நிதியை வழங்காமல் துரோகம் செய்கிறது. இதை தேர்தல் நேரத்தில் மக்களிடம் எடுத்துச் சொல்லி, தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டும்.
கடந்த மூன்று முறையும், டில்லியில் நடந்த 'நிடி ஆயோக்' கூட்டத்திற்கு செல்லாத தமிழக முதல்வர் ஸ்டாலின், அமலாக்கத் துறை ரெய்டு வந்தால் போதும், ஏதோ ஒரு காரணத்துக்காக டில்லி செல்வது போல ஓடோடிச் சென்று பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
தவறிழைப்பவர்கள் தான் அமலாக்கத் துறை நடவடிக்கைக்கெல்லாம் பயப்பட வேண்டும். எங்களுக்கு அப்படி எவ்வித பயமும் கிடையாது.
இந்த நாட்டை நிர்வாகம் செய்வது சட்டசபையா, பார்லிமென்டா அல்லது நீதிமன்றமா என்ற கேள்வி எழுகிறது, எல்லா முடிவையும் நீதிமன்றமே எடுத்துக் கொண்டு, சட்டசபையையும், பார்லிமென்டையும் கேள்வி கேட்குமானால், அந்த சபைகளை கலைத்து விடலாம்.
இவ்வாறு சீமான் கூறினார்.