ADDED : டிச 29, 2025 05:26 AM

சென்னை: 'கோவையில் உள்ள உயர்மட்ட பாலத்திற்கு, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை: கொள்கைகளும், பாதைகளும் வெவ்வேறானாலும், மக்களின் நன்மதிப்பை பெற்று, நாட்டுக்காக பணியாற்றிய தலைவர்களை போற்றுவதே மாண்பு.
மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்து, நாட்டு மக்களின் பசிப்பிணியை போக்கியவர், பசுமை புரட்சிக்கு அடித்தளமாக இருந்தவர் பாரத ரத்னா சி.சுப்பிரமணியம்.
அவரது புகழொளியை பரப்பிட வேண்டும் என, டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் வைத்த கோரிக்கையை ஏற்று, கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு, 'சி.சுப்பிரமணியம் மேம்பாலம்' என்று பெயர் சூட்டும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை, அனை வருடனும் பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

