ADDED : பிப் 23, 2024 02:19 AM
சென்னை: ''கோவையில் அறிவிக்கப்பட்டுள்ள நுாலகம், 2026 ஜனவரியில் திறக்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டசபையில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை முடிந்ததும், முதல்வர் எழுந்து பேசியதாவது:
சட்டசபையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசியவர்களுக்கு, மிகத் தெளிவாக, விளக்கமாக அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
பாராட்டுக்குரிய வகையில், அவரின் பதில் அமைந்தது; அவருக்கு வாழ்த்துகள்.
விவாதத்தின் போது, சில எம்.எல்.ஏ.,க்கள் முன்வைத்த கேள்விக்கு, விளக்கம் சொல்லி இருக்கிறார். ஆனால், பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கோரிக்கைக்கு, ஏன் பதில் சொல்லாமல் விட்டு விட்டார் என்று எனக்கு புரியவில்லை.
அவர் ஒரு கோரிக்கையை வைத்தார். கோவையில் நுாலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து விட்டு, 'அது எங்கே அமையவிருக்கிறது; எவ்வளவு நிதி ஒதுக்கப் போகிறீர்கள்; எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்; எப்போது முடிவடையும்?' என்று கேட்டிருந்தார்.
நிச்சயமாக அது உடனடியாக செயலாக்கத்திற்கு வரும். ஏனென்றால், இந்த ஆட்சி சொன்னதை செய்யும்; சொன்னதை தாண்டியும் செய்யும்; சொல்வதைத்தான் செய்யும்.
மதுரையில் உலகத்தரம் வாய்ந்த நுாலகம், சென்னையில் கலைஞர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை, மதுரை அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைந்தது போல, சொன்னபடி இந்த ஆட்சியில் நடக்கும்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டதைப் போல் இல்லாமல், குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும். அதுவும் குறிப்பிட்ட நாளையும் குறிப்பிட விரும்புகிறேன்.
வரும், 2026 ஜனவரி மாதம் திறக்கப்படும். திறப்பு விழாவுக்கு, உங்களுக்கு முறையாக அழைப்பு வரும். நீங்களும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.