குற்றவியல் சட்டப்படி கடும் நடவடிக்கை: நெல்லையில் குப்பையை கொட்டியவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
குற்றவியல் சட்டப்படி கடும் நடவடிக்கை: நெல்லையில் குப்பையை கொட்டியவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
ADDED : டிச 17, 2024 02:53 PM

திருநெல்வேலி: கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து நெல்லையின் பழவூர் பகுதியில் மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
கேரளாவில் இருந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் லாரி லாரியாக இறைச்சி கழிவுகள், மருத்துவக் கழிவுகள் குப்பைகளை மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். நாகர்கோவில் வழியாக வரும் மூட்டைகளை திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், பணகுடி, நாங்குநேரி வட்டாரங்களில் கொட்டினர்.தென்காசி வழியே வரும் லாரிகளில் மருத்துவக் கழிவுகளை கடையம், ஆலங்குளம் வட்டாரங்களில் கொட்டினர். நேற்று முன்தினம் திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு உள்ளன. இதற்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் கேரளாவிற்கு எதிர்ப்பை பதிவு செய்தார்.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கே.பி.கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோடகநல்லூர் பழவூர் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக வந்த புகார்கள் தொடர்பாக மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டம் பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் 271, 272 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சிதுறை மூலம் அந்த கழிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பையை கொட்டியவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.