தேர்வு எழுத உதவும் 'ஸ்கிரைப்' ஆக கல்லுாரி மாணவர்களுக்கும் அனுமதி
தேர்வு எழுத உதவும் 'ஸ்கிரைப்' ஆக கல்லுாரி மாணவர்களுக்கும் அனுமதி
ADDED : ஜன 30, 2026 06:45 AM
சென்னை: பார்வை குறைபாடு உள்ள, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் சொல்வதை எழுதும் உதவியாளரான, 'ஸ்கிரைப்' ஆக செயல்பட, கல்லுாரி மாணவர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பார்வைத்திறன் குறைபாடுள்ள மாணவர்கள், சிந்தனை குறைபாடுள்ள மாணவர்கள், விபத்தினால் தேர்வு எழுத முடியாத நிலையில் இருக்கும் மாணவர்கள் உள்ளிட்டோர், தேர்வு எழுத உதவும் வகையில், 'ஸ்கிரைப்' எனும் உதவியாளரை நியமித்துக்கொள்ள அனுமதி உண்டு.
அதன்படி இதுவரை, பள்ளி ஆசிரியர்களே, 'ஸ்கிரைப்' ஆக செயல்பட்டனர்.
இந்நிலையில், மாணவர்களுக்கு விடை தெரியாத கேள்விகளுக்கும், 'ஸ்கிரைப்' ஆசிரியர்கள் விடை எழுதுவதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், அரசு தேர்வுகள் இயக்குநர் சசிகலா, 'ஸ்கிரைப்' ஆக செயல்பட, இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களை பயன்படுத்த அனுமதி அளித்து உள்ளார்.
இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'ஆசிரியர் பயிற்சி கல்லுாரி, தொழில், கலை அறிவியல் கல்லுாரிகளில், இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ - மாணவியரில் விருப்பமுள்ளவர்களை தேர்வு செய்யலாம்.
அதேபோல், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வளர்களிடமும் விருப்ப பட்டியல் பெற வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் உதவியாளர்களுக்கு, வரும் 5ம் தேதிக்குள் உரிய பயிற்சி அளிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

