ADDED : டிச 28, 2024 03:18 AM
சென்னை: சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில், கல்லுாரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் தற்போது, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில பள்ளி, கல்லுாரிகள் மட்டும் இயங்குகின்றன. இந்நிலையில், செயல்படும் கல்லுாரி வளாகங்களில் மாணவர் அமைப்புகள் இணைந்து, சென்னை அண்ணா பல்கலை மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், மாணவியருக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல மாவட்டங்களில், கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். சென்னையில் நந்தனம் அரசு கல்லுாரி, மாநில கல்லுாரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
அதேபோல, தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லுாரி, கும்பகோணம் ஆண்கள் கலைக்கல்லுாரி, மதுரை காமராஜர் பல்கலை, திருச்சி, காட்டூர் உருமு தனலட்சுமி கல்லுாரி, கடலுார் அரசு கலைக்கல்லுாரி, மயிலாடுதுறை, மணல்மேடு அரசு கல்லுாரி உள்ளிட்டவற்றில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.