மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி வாணியம்பாடி வர்த்தகர்கள் கடையடைப்பு
மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி வாணியம்பாடி வர்த்தகர்கள் கடையடைப்பு
ADDED : ஜன 24, 2024 01:32 AM

வாணியம்பாடி:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி நகர பகுதியில் முக்கிய அலுவலகங்கள் உள்ளன. இதனால் தினமும், வாணியம்பாடி மற்றும் நியூ டவுன் பகுதிக்கு இடையிலுள்ள ரயில்வே கேட்டை, 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.
ரயில் வழித்தடத்தில் தினமும், சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - கோவை செல்லும் ரயில்கள் என, 100க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன.
சில நேரங்களில், 5 - 6 ரயில்கள், ஒரு சில நிமிட இடைவெளியில் தொடர்ந்து செல்வதால், இந்த ரயில்வே கேட், ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து மூடப்படுகிறது.
இதனால், இப்பகுதி வழியாக சென்று வரும் பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவை சிக்கி தவிக்கின்றன. எனவே, அங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டி, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் வாணியம்பாடியில், வணிகர் சங்கங்களுடன் இணைந்து பல அமைப்பினர் நேற்று ஒரு நாள், கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், காலை, 9:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடந்தது. மேலும், எல்.ஐ.சி. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

