முன்னாள் அமைச்சர் வழக்கில் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
முன்னாள் அமைச்சர் வழக்கில் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
ADDED : பிப் 20, 2024 12:51 AM
சென்னை:முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது புகாரை, மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்ததற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆணையம் பதில் அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022ல், உள்ளாட்சி தேர்தலின் போது, தி.மு.க., பிரமுகரை தாக்கியதாக பதிவான வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
கைதின் போது, மனித உரிமைகள் மீறப்பட்டதாக, மாநில மனித ஆணையத்தில் ஜெயக்குமார் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதை விசாரித்த ஆணையம், புகாரை முடித்து வைத்து கடந்த ஆண்டு ஜூலையில் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்தார். புகார் குறித்து தன்னிடம் விசாரிக்காமலே, ஆணையம் அதை முடித்து வைத்ததாகவும், அந்த உத்தரவை ரத்து செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், மனுவில் கூறியிருந்தார்.
மனு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்க, மனித உரிமை ஆணையம் மற்றும் போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

