ADDED : பிப் 08, 2024 10:00 PM
சென்னை:அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான, 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்த, குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தம், கடந்தாண்டு ஆக., 31ல் முடிந்தது. தொடர்ந்து, 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தக்கோரி, வேலை நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை, தொழிற்சங்கங்கள் துவக்கி உள்ளன.
இதையடுத்து, தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில், நேற்று முன்தினம் முத்தரப்பு பேச்சு நடந்தது. தொடர்ந்து, ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்த அரசு தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை செயலர் பணீந்திரரெட்டி பிறப்பித்த அரசாணை:
போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை, அரசு பரிசீலித்து, 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்த குழு அமைக்கப்பட்டுஉள்ளது.
நிர்வாகம் தரப்பில் பங்கேற்க நிதித்துறை செயலர், எட்டு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள், போக்குவரத்து துறை தலைவர் அலுவலக தனி அலுவலர் உட்பட, 14 பேர் கொண்ட குழு அமைத்து அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

