மூத்த குடிமக்களிடம் திருட்டு போன நகைகளை மீட்காவிட்டால் இழப்பீடு
மூத்த குடிமக்களிடம் திருட்டு போன நகைகளை மீட்காவிட்டால் இழப்பீடு
ADDED : செப் 04, 2025 03:19 AM
சென்னை:'மூத்த குடிமக்களிடம் திருடப்பட்ட பொருட்களை, காவல் துறை மீட்டு தர தவறினால், அவர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மூதாட்டிக்கு 4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த, 68 வயதான கிருஷ்ணவேணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,' கடந்த 2018ம் ஆண்டு திருவள்ளூர் மா.பொ.சி., தெருவில் நானும், என் கணவரும் நடந்து சென்றபோது, எங்களிடமிருந்த, 17.5 சவரன் நகைகள், 5,000 பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து, திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தோம். வழக்குப்பதிவு செய்த போலீசார், இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
நகை பணம் பறிபோய் ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, இதுவரை குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை.
இதுபோல, சமீப காலமாக மூத்த குடிமக்களை குறி வைத்து, திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன.
உதவியற்ற ஆன்மாக்களை ஏமாற்றுவதால், அவர்கள் கடுமையாக வேதனை அனுபவிக்கின்றனர். புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, காவல் துறை குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறினால், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு, தமிழகத்தில் உருவாக்கப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு சட்டம் வெறும் 1 லட்சம் ரூபாய் வழங்குவதாக மட்டுமே உள்ளது; அந்த தொகை உயர்த்த வேண்டும்.
ஒரு சவரன் நகை, 75 ஆயிரம் ரூபாய் என கணக்கில் எடுத்துக் கொண்டால், பாதிக்கப்பட்டவர்கள் இழந்ததில் குறைந்தபட்சம் 30 சதவீதம், அதாவது நான்கு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.