வாசிப்பு இயக்கத்தை பலப்படுத்த பள்ளி மாணவர்களுக்கு போட்டி
வாசிப்பு இயக்கத்தை பலப்படுத்த பள்ளி மாணவர்களுக்கு போட்டி
ADDED : ஆக 09, 2025 11:59 PM
பள்ளிகளில் வாசிப்பு இயக்கத்தை பலப்படுத்த, பள்ளி கல்வித்துறை சார்பில் வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை அரசு, துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி நுாலகங்களுக்கு, ஒருங்கிணைந்த கல்வி திட்டம் மூலம் புத்தகங்கள் வழங்கப் படுகின்றன.
கடந்த, 2023 - 24ல், 53 புத்தகங்கள்; 2024 - 25ம் கல்வி ஆண்டில், 70 புத்தகங்கள் வினியோகிக்கப்பட்ட நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் ஒவ்வொரு பள்ளிக்கும், தலா, 81 புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
இதன்மூலம் பள்ளிகளில் வாசிப்பு இயக்கத்தை பலப்படுத்துவது குறித்து, கடந்த, 5ல் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகளின் விபரம்:
பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் மாணவர்கள் வாசிக்கும்படி, கதை சொல்லும் அமர்வுகள், வாசிப்பு சவால்கள், புத்தக கிளப் நடவடிக்கை உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். அறிவு தேடல், கருப்பொருள் வாசிப்பு வாரம் என, திட்டமிட வேண்டும்.
ஒவ்வொரு வாரமும், ஒரு தலைப்பில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி, பேச்சுப்போட்டி, கதை சொல்லுதல், நடித்து காட்டுதல், குழு விவாதம், பட்டி மன்றம் ஆகியவற்றை நடத்த வேண்டும்.
இவை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்துவதை, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -