ADDED : அக் 07, 2025 07:36 AM

சென்னை : 'திருவள்ளூர் மாவட்டம், புழல் பகுதியில் ரேஷன் கடைகளில், காலாவதியான பாமாயில் வழங்கப்படுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, கிடங்குகளில் இருந்து தரமான பொருட்கள் அனுப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்' என, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு, உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், லிட்டர் பாமாயில், 25 ரூபாய் என, குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. இதை, 'டெண்டர்' வாயிலாக, தனியார் நிறுவனங்களிடம் இருந்து, நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்கிறது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், புழல் சூரப்பட்டு பகுதியில், காலாவதியான பாமாயில் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், கிடங்குகளில் ஆய்வு செய்து, தரமான பொருட்களை மட்டுமே அனுப்புவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு, உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, உணவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாமாயில் ஆயுட்காலம் இரு மாதங்கள். புழல் பகுதியில் ஒரு கடைகளில் காலாவதியான பாமாயில் வினியோகம் செய்யப்படுவதாக, புகார் வந்தது. இது குறித்து விசாரித்ததில், ஊழியர் கவனக்குறைவாக, ஏற்கனவே கடையில் இருப்பு இருந்த, மூன்று பழைய பாக்கெட்டை வழங்கியிருப்பது தெரியவந்தது.
எனவே, கார்டுதாரர்களிடம் வழங்கப்படும் போது, பாமாயில் தேதியை சரிபார்த்து வழங்குமாறு ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கிடங்குளில் ஆய்வு செய்து தரமான பொருட்களை அனுப்பு வதில், முழு கவனமுடன் இருக்குமாறு அதிகாரி களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.