ரூ.3 லட்சம் வாடகை பாக்கி நடிகர் கஞ்சா கருப்பு மீது புகார்
ரூ.3 லட்சம் வாடகை பாக்கி நடிகர் கஞ்சா கருப்பு மீது புகார்
ADDED : ஜன 26, 2025 03:13 AM

சென்னை: நடிகர் கஞ்சா கருப்பு, 3 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பதாகவும், வீட்டை, 'லாட்ஜ்' போன்று மாற்றி விட்டதாகவும், அவர் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு; சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகரில் ரமேஷ் என்பவரது வீட்டில், 2021 முதல் 20,000 ரூபாய் வாடகைக்கு இருந்துள்ளார்.
சென்னையில் சினிமா ஷூட்டிங் நடக்கும் நாட்களில், அவர் இந்த வீட்டில் தங்குவது வழக்கம்.
இந்நிலையில், கஞ்சா கருப்பு மீது வீட்டின் உரிமையாளர் ரமேஷ், மதுர வாயல் காவல் நிலையத்தில், 'ஆன்லைன்' வாயிலாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், 'கஞ்சா கருப்பு, 3 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருக்கிறார். வீட்டை உள்வாடகைக்கு விட்டு, மதுபானம் மற்றும் தகாத நடைமுறைகளை மேற்கொண்டு, 'லாட்ஜ்' போல மாற்றி விட்டார்.
'இதுகுறித்து கேட்ட போது, எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்' என்று குறிப்பிட்டுஉள்ளார். இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதேநேரம், கஞ்சா கருப்பும், 'ஆன்லைன்' வாயிலாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதில், 'நான் ஊரில் இல்லாத வேளையில், வீட்டின் பூட்டை உடைத்து உரிமையாளர் ரமேஷ் அத்துமீறியுள்ளார். வீட்டில் இருந்த என் உடைமைகள், கலைமாமணி விருது உள்ளிட்டவற்றை உடைத்துள்ளார்' என, தெரிவித்துள்ளார்.
இருதரப்பு புகார் குறித்து, மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.

