sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அ.தி.மு.க.,வுக்கு திருமாவளவன் அழைப்பு

/

அ.தி.மு.க.,வுக்கு திருமாவளவன் அழைப்பு

அ.தி.மு.க.,வுக்கு திருமாவளவன் அழைப்பு

அ.தி.மு.க.,வுக்கு திருமாவளவன் அழைப்பு

30


UPDATED : செப் 10, 2024 11:34 PM

ADDED : செப் 10, 2024 11:28 PM

Google News

UPDATED : செப் 10, 2024 11:34 PM ADDED : செப் 10, 2024 11:28 PM

30


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : மதுக்கடைகளை அரசே நடத்தி வரும் நிலையில், ஆளும் தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள திருமாவளவன், அக்., 2ல் மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக அறிவித்துள்ளார்; அதோடு நில்லாமல், மாநாட்டுக்கு வருமாறு, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

திருமாவளவன் அளித்த பேட்டி:


காந்தி பிறந்த நாளில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் அணி சார்பில், மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு, கள்ளக்குறிச்சி அல்லது உளுந்துார்பேட்டை அருகே நடக்க உள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி, 69 பேர் இறந்தனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தபோது, 'அரசு எங்களுக்கு இழப்பீடு தருவது முக்கியம் அல்ல. அரசு மதுபானக் கடைகளை மூட வேண்டும். சாராயத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை' என்றனர்.

உறுதிமொழி


எனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மாநாடு நடத்த உள்ளோம். மதுவிலக்கு கொள்கையை தன் உயிர்மூச்சாகக் கொண்டவர் காந்தி.

அவர் பிறந்த நாளில், மகளிரை திரட்டி மாநாடு நடத்த உள்ளோம். அதில் முதன்மையான கோரிக்கை, தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதே.

தி.மு.க., தேர்தல் அறிக்கையில், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக உறுதிமொழி அளித்திருந்தது.

அனைத்து கட்சிகளும் மதுவிலக்கை வலியுறுத்தும்போது, மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம்?

நல்ல சாராயத்தால், கள்ளச்சாராயத்தை தடுக்க முடியும் என்ற விவாதம் ஏற்கத்தக்கதல்ல. சாராயம் என்றாலே கேடுதான். தேசிய அளவில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கான கொள்கையை வரையறுத்து, அதன் அடிப்படையில் சட்டம் இயற்ற வேண்டும்.

அனைவரையும் குடிநோயாளியாக மாற்றிவிட்டு, அவர்களுக்கு நலத்திட்டங்களை அறிவிப்பதில், எந்த பயனும் இல்லை.

மதுவிலக்கை தேசிய கொள்கையாக, மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பைத் தடுக்க, சிறப்பு நிதி வழங்க வேண்டும். தமிழக அரசு மதுக்கடைகளை முழுமையாக மூட, கால அட்டவணையை அறிவிக்க வேண்டும்.

போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநாட்டில் வலியுறுத்த உள்ளோம்.

கள்ளும் கூடாது


பீஹாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டபின், பெண்கள் மீதான தாக்குதல் குறைந்துள்ளது. எனவே, தமிழக அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கள் உட்பட எந்த போதைப்பொருளும் கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு.

மது ஒழிப்பு மாநாட்டில், அ.தி.மு.க., பங்கேற்கலாம்; எல்லா கட்சிகளும் வரலாம். மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள அனைவரும், ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை உள்ளது.

இதை தேர்தலோடு சம்பந்தப்படுத்த வேண்டாம். எங்களை பொறுத்தவரை, தேர்தல் அரசியல் நிலைப்பாடு வேறு. மக்கள் பிரச்னைக்காக, மதவாத, ஜாதியவாத சக்திகள் தவிர, எந்த சக்திகளோடும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

'அவர்கள் விருப்பம்!'

சிவகங்கையில் அமைச்சர் உதயநிதியிடம், அ.தி.மு.க.,வுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது குறித்து கேட்கப்பட்டதற்கு, ''அது அவர்கள் விருப்பம்; பங்கேற்பது அ.தி.மு.க., விருப்பம்,'' என்றார்.



அணி மாற்றத்திற்கு அச்சாரமா?

தி.மு.க., கூட்டணியில் உள்ள திருமாவளவன், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வுக்கு அழைப்பு விடுத்தது, தி.மு.க., தலைமைக்கு அதிர்ச்சியையும், அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:லோக்சபா தேர்தல் பேச்சின்போது, தி.மு.க.,வுடன் ஏற்பட்ட கசப்புகளை, திருமாவளவன் மறக்கவில்லை. அதனாலேயே, அவர் அரசுக்கும், தி.மு.க.,வுக்கும் நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு என, திருமாவளவன் அறிவித்தபோது, தி.மு.க., தலைமை அதை சாதாரணமாகக் கருதியது. இப்போது அ.தி.மு.க., பங்கேற்க அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, பின்னணி குறித்து ஆளும் தி.மு.க., ஆராயத் துவங்கி இருக்கிறது.
தி.மு.க., கூட்டணியில் போதுமான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் கருதும் திருமாவளவனின் உள்ளக்குமுறலை புரிந்துகொண்ட அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சில அ.தி.மு.க., பிரமுகர்களை, திருமாவளவனை சந்தித்துப் பேச வைத்துள்ளார். வரும் சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., கட்டமைக்க விரும்பும் மெகா கூட்டணியில், வி.சி., இடம்பெற வேண்டும் என்றும், 30 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் பேசப்பட்டு உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட வேறு சில கட்சிகளையும் அ.தி.மு.க., பக்கம் அழைத்து வந்தால், ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படும் என்ற பழனிசாமியின் எண்ணங்களை, திருமாவளவனிடம் தெரிவித்துஉள்ளனர். குறிப்பாக, வி.சி.,க்கள் அ.தி.மு.க., பக்கம் வந்தால், அவர்களுக்கு துணை முதல்வர் பதவி வரை தர பழனிசாமி தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்தே, சட்டசபை தேர்தலை நோக்கி, திருமாவளவன் காய் நகர்த்தத் துவங்கி உள்ளார். அ.தி.மு.க.,வுக்கு அழைப்பு விடுத்ததன் வாயிலாக, புதிய கூட்டணிக்கு அச்சாரம் போட்டிருக்கிறார். ஒருவேளை அது நடக்காமல் போனால், இருக்கும் கூட்டணியில் மிகுந்த மரியாதை கிடைப்பதோடு, வலுவான பேரம் பேச வாய்ப்பு கிடைக்கும். முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து திரும்பியபின், வி.சி.,க்களின் நடத்தைகள் மீது தி.மு.க.,வின் பார்வையை வெளிப்படுத்தக்கூடும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.



அ.தி.மு.க., வரவேற்பு!

அ.தி.மு.க., செய்தித் தொடர்பு செயலரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் கூறியதாவது:இது வரவேற்கத்தக்கது. மாநாட்டில் பங்கேற்பது குறித்து, பழனிசாமி முடிவு எடுப்பார். அ.தி.மு.க.,வுக்கு அழைப்பு விடுத்ததன் வழியாக, திருமாவளவன் தி.மு.க.,வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.
தி.மு.க., கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலில் எதுவும் நடக்கலாம் என்பதை, அவர் கோடிட்டுக் காட்டி உள்ளார்.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், கள்ளச்சாராய இறப்புகள் அதிகரித்தன. கள்ளக்குறிச்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் விளைவாக மது ஒழிப்பு மாநாட்டை திருமாவளவன் அறிவித்து, தி.மு.க.,வுக்கு முதல் அதிர்ச்சியை அளித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us