கிராமப்புற இளைஞர்களுக்காக கஞ்சா கடத்தியதாக வாக்குமூலம்
கிராமப்புற இளைஞர்களுக்காக கஞ்சா கடத்தியதாக வாக்குமூலம்
ADDED : டிச 05, 2024 03:59 AM
சென்னை: கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு விற்க, ஒடிசாவில் இருந்து, 848 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக, கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திண்டுக்கல் தினேஷ், திருச்சி சிவஞானம், திருவண்ணாமலை பார்த்தசாரதி ஆகியோர், ஒடிசாவில் இருந்து ஆந்திரா வழியாக, சென்னைக்கு லாரியில், 4.25 கோடி ரூபாய் மதிப்புள்ள, 848 கிலோ உயர் ரக கஞ்சா கடத்திய வழக்கில், என்.சி.பி., என்ற மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பார்த்தசாரதி அளித்துள்ள வாக்குமூலம்:
நாங்கள் மூவரும் நண்பர்கள். இதற்கு முன், ஒடிசா மாநில எல்லையில் இருந்து, தமிழகத்திற்கு மூன்று முறை கஞ்சா கடத்தி வந்துள்ளோம்.
திண்டுக்கல், திருச்சி என, பல ஊர்களைச் சேர்ந்தவர்கள், எங்களிடம் மொத்தமாக கஞ்சா வாங்கி, சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, கிராமப்புற இளைஞர்கள், அதிகளவில் கஞ்சா வாங்கி உபயோகிக்கின்றனர்.
அவர்களுக்கு விற்க வேண்டும் என்பதற்காக, 848 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தோம். எங்கள் கூட்டாளிகள் வாயிலாக, இலங்கைக்கும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.