டில்லியில் காங்கிரஸ் போராட்டம்: மாவட்ட தலைவர்கள் ஆர்வம்
டில்லியில் காங்கிரஸ் போராட்டம்: மாவட்ட தலைவர்கள் ஆர்வம்
ADDED : டிச 12, 2025 05:50 AM

மதுரை: தேர்தல் கமிஷனை கண்டித்து, அகில இந்திய காங்கிரஸ் சார்பில், டில்லியில், நாளை மறுநாள்(டிச.,14) நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க, தமிழக நிர்வாகிகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது ஆர்வம் காட்டுகின்றனர்.
'ஓட்டு திருட்டு' என தேர்தல் கமிஷன் மீது குற்றஞ்சாட்டி, டில்லி ராம்லீலா மைதானத்தில், வரும் 14ம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் தலைமை சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. ராகுல், பிரியங்கா ஆகியோரை முன்னிலைப்படுத்தும் வகையில், இந்தப் போராட்டத்தை காங்., நடத்துகிறது.
இதில் பங்கேற்க அனைத்து மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் இருந்தும் பலர் டில்லி செல்ல உள்ளனர். இதற்கிடையில், தமிழக காங்கிரஸின் புதிய மாவட்ட தலைவர்கள் அறிவிப்பு, வரும் 16ல் வெளியாகும் என தெரிகிறது.
எனவே, கட்சியின் தமிழக முக்கிய தலைவர்கள் வாயிலாக, அகில இந்திய தலைமையை சரிசெய்து, மாவட்ட தலைவர் பதவியை தக்கவைக்க, தற்போதைய மாவட்ட தலைவர்கள் பலர், இந்தப் போராட்டத்தில், அதிக விருப்பத்துடன் பங்கேற்க உள்ளனர்.
டில்லி போராட்டத்தில் கலந்து கொண்டு, அப்படியே ராகுல், பிரியங்கா, கார்கே உள்ளிட்ட தலைவர்களிடம், தங்களைப் பற்றி சிபாரிசு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்காகவே, தமிழக காங்., மாநில நிர்வாகிகளை, தற்போதைய மாவட்ட தலைவர்கள், தங்கள் சொந்த செலவில், டில்லிக்கு அழைத்துச் செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

