ADDED : செப் 22, 2024 03:18 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ். 300 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படுகிறது.
இந்தப் பணிகள் முடிந்தவுடன் பெங்களுரூ - மதுரை வந்தே பாரத் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க பரிசீலிக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் கூறினார்.
பி பிளஸ் தகுதி
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் விழுப்புரத்தில் இருந்து நெல்லை வரை பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களில் நடக்கும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார்.
நெல்லை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் செய்ய வேண்டிய கூடுதல் வசதிகள், பயணியருக்கான முக்கியத் தேவைகள், மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
பின், நிருபர்களிடம் ஆர்.என்.சிங் கூறியதாவது:
நெல்லை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் அம்ரித் பாரத் திட்டத்தில் மேம்பாட்டுப்பணிகள் விரைவில் துவக்கப்படுகின்றன.
தற்போது இந்த ஸ்டேஷன் வருவாய் அடிப்படையில் பி பிளஸ் தகுதிக்கு உயர்ந்துள்ளதால், 300 கோடி ரூபாய் செலவில் இங்கு மேம்பாட்டுப் பணிகள் செய்யப்படும்.
நெல்லை ரயில் நிலையத்தில், விமான நிலையத்துக்கு இணையான வசதிகள் செய்யப்படும்.
பயணியர் வந்து செல்வதற்கு தனி பாதைகள், லிப்ட், மல்டி லெவல் பார்க்கிங், ஏ.சி. வசதியுடன் கூடிய காத்திருக்கும் அறைகள், வணிக வளாகங்கள் என பல்வேறு நவீன வசதிகள் இங்கு இடம் பெறும்.
பட்ஜெட் நிதிஒதுக்கீடு அடிப்படையில் இந்தப் பணிகள் நடக்கும். நெல்லை தனிக் கோட்டம் குறித்த அறிவிப்பு நான்கு ஆண்டுகளுக்குள் எதிர்பார்க்கலாம்.
மக்களின் தேவை அடிப்படையில் பிரதான வழித்தடங்களில் ரயில்கள் இயக்கத்திற்கு தற்போது கவனம் செலுத்தப்படுகிறது. 4 ஆண்டுகளுக்குப்பின், மெமு ரயில்கள் உற்பத்தி தற்போது அதிகரித்துள்ளது.
இதுவரை இயக்கப்படாத இடங்களுக்கு மெமு ரயில்கள் இயக்கப்படும். தென் மாவட்ட நகரங்களுக்கு மெமு ரயில் வசதி கிடைக்கும்.
திருவனந்தபுரத்தில் இருந்து பல்வேறு ரயில்கள் நெல்லைக்கு வந்து செல்கின்றன. அந்த ரயில்களை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
சென்னை - நெல்லை வழித்தடத்தில் புதிய ரயில் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும். பெங்களுரூ - மதுரை வந்தே பாரத் ரயிலை நெல்லை வரை நீட்டிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்கு கூடுதல் முன்பதிவு இல்லா பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இங்கு பார்க்கிங் பிரச்னை, பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் அளிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.
மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா, ரயில்வே உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
எம்.பி., வலியுறுத்தல்
நெல்லை தொகுதி எம்.பி., ராபர்ட் புரூஸ், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை சந்தித்து தொகுதியின் ரயில்வே துறை சார்ந்த முக்கிய தேவைகளை வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் தெற்கு ரயில்வே மேலாளரிடம் மனு அளித்தார். கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக பொது மேலாளர் உறுதி அளித்தார்.
பல்வேறு பயணியர் சங்கத்தினரும் பொது மேலாளரிடம் மனு அளித்தனர்.

