ADDED : செப் 04, 2025 02:02 AM
சென்னை:தமிழகத்தில், 50 இடங்களில், 20 கோடி ரூபாயில், கட்டுமான தொழிலாளர் வசதி மையங்கள் ஏற்படுத்தும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி உட்பட பல்வேறு நகரங்களில், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் வேலைக்கு செல்ல, காலை நேரங்களில் ஒரே இடத்தில் கூடி நிற்கின்றனர். அங்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
அந்த இடங்களில் கட்டுமானத் தொழிலாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன், வசதி மையங்கள் ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை, சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அறிவித்தார். கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில், இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 20.2 கோடி ரூபாய் மதிப்பில், 50 இடங்களில் வசதி மையங்கள் ஏற்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை, தொழிலாளர் நலத்துறை துவக்கி உள்ளது.