தீபத் துாணில் தீபம் ஏற்றும் விவகாரம்: அவமதிப்பு வழக்கு மேல்முறையீடு: உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு
தீபத் துாணில் தீபம் ஏற்றும் விவகாரம்: அவமதிப்பு வழக்கு மேல்முறையீடு: உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு
UPDATED : பிப் 24, 2026 10:40 PM
ADDED : பிப் 24, 2026 01:57 AM

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் துாணில், தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிராக, கலெக்டர், போலீஸ் கமிஷனரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்தி வைத்தது.
மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனுக்களின் அடிப்படையில், டிச.,1ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'டிச.,3 கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தீபத் துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்' என உத்தரவிட்டார்.
இதற்கு எதிராக கோயில் செயல் அலுவலர், கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். ஜன.,6ல் விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, 'இனிமேல் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கோயில் நிர்வாகம், தனது குழுவின் மூலம் தீபத் துாணில் தீபம் ஏற்ற வேண்டும்' என உத்தரவிட்டு மனுக்களை பைசல் செய்தது.
இதற்கிடையில் தனி நீதிபதி டிச., 1ல் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 'தீபத் துாணில் ராம ரவிக்குமார் தரப்பில் தீபம் ஏற்ற போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என டிச., 4ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து கலெக்டர், போலீஸ் கமிஷனர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். டிச., 9ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாவட்ட அளவிலான அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் குறித்து விளக்கமளிக்க தமிழக தலைமைச் செயலர், சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., காணொலியில் ஆஜராக உத்தரவிட்டார்.
அடுத்தகட்ட விசாரணையில் தலைமைச் செயலர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராகிய நிலையில், தனி நீதிபதியின் இவ்வுத்தரவை எதிர்த்து தலைமைச் செயலர், ஏ.டி.ஜி.பி., கலெக்டர், போலீஸ் கமிஷனர் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் தாக்கல் செய்யப்பட்டன.
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு நேற்று விசாரித்தது.தனி நீதிபதி விசாரித்து வரும் அவமதிப்பு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையின் போது தமிழக செயலர், சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டதால் அவர்களின் மேல்முறையீட்டு மனுக்களை திரும்பப் பெறுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை நீதிபதிகள் பதிவு செய்தனர்.
ராம ரவிக்குமார் தரப்பில், 'இந்த அமர்வின் முன் இவ்வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, தனி நீதிபதியின் விசாரணைக்கு வாய்தா கேட்கக் கூடாது' என முறையிட்டனர்.
'இவ்வழக்கில் எவ்வித தடையோ, இடைக்கால உத்தரவோ பிறப்பிக்கப்படவில்லை.
எனவே அதை தனி நீதிபதி பார்த்துக் கொள்வார்' என்று கூறிய நீதிபதிகள், கலெக்டர், போலீஸ் கமிஷனரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை மார்ச் 16க்கு ஒத்தி வைத்தனர்.

