தொடர் மழை; விமான சேவைகள் ரத்து; வானில் வட்டமடிக்கும் விமானம்!
தொடர் மழை; விமான சேவைகள் ரத்து; வானில் வட்டமடிக்கும் விமானம்!
UPDATED : நவ 30, 2024 10:10 AM
ADDED : நவ 30, 2024 07:14 AM

சென்னை: புயல் காரணமாக, சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகிறது.
பெஞ்சல் புயல் தற்போது வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு அருகே காரைக்கால்- மாமல்லபுரம் இடையே இன்று கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மாமல்லபுரம் அதன் சுற்று வட்டார பகுதியான பூஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் மோசமான வானிலை நிலவுகிறது. சென்னைக்கு சிங்கப்பூர், திருச்சி, மங்களூரு உள்பட பல பகுதிகளில் இருந்து வரும், 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்சி, தூத்துக்குடி, மைசூரு, பெங்களூரூ, அந்தமான் செல்லும் விமானங்கள் வழக்கம் போல் இயங்கும். விமான புறப்படும் நேரத்தை அறிந்து கொண்டு பயணத்தை திட்டமிட வேண்டும் என பயணிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
சென்னையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக வானில் விமானம் வட்டமடிக்கின்றன. குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகிறது.