சொத்து விபரம் சமர்ப்பிக்க கண்டிப்பு ஒப்பந்த பணியாளர்கள் அதிர்ச்சி
சொத்து விபரம் சமர்ப்பிக்க கண்டிப்பு ஒப்பந்த பணியாளர்கள் அதிர்ச்சி
ADDED : செப் 29, 2024 01:32 AM
சென்னை:தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் உதவித் திட்ட அலுவலர்கள், தங்கள் சொத்துக் கணக்கை, அக்., 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, அதிகாரிகள் உத்தரவிட்டுஉள்ளனர்.
ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன திட்டங்களுக்காக, வட்டார மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட அளவில் உதவித் திட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், கடந்த 12 ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். மாவட்ட அளவில் பணியாற்றும், உதவித் திட்ட அலுவலர்களுக்கு, மாத சம்பளமாக 35,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
பி.எப்., பிடித்தம் எதுவும் இல்லை; விடுப்பு எடுத்தால் சம்பளம் கிடையாது. இவர்கள் கடந்த ஆகஸ்டில், மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்யப்பட்டனர்.
தற்போது அனைவரும், அக்., 31ம் தேதிக்குள், தங்கள் சொத்து கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.
பணியில் சேர்ந்த நாள், தற்போது வகிக்கும் பதவி, ஆண்டு வருமானம், அசையா சொத்துக்கள், அதன் வழியே வரும் வருமானம், அசையும் சொத்துக்கள், காப்பீட்டு விபரங்கள், கடன்கள் என, அனைத்து விபரங்களும் கேட்கப்பட்டு உள்ளன.
இது, உதவித் திட்ட அலுவலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.