UPDATED : நவ 16, 2024 08:30 PM
ADDED : நவ 16, 2024 08:24 PM

ஐதராபாத்: தெலுங்கர்கள் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை கஸ்தூரியை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 3ம் தேதி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, அர்ஜுன் சம்பத் தலைமையிலான, ஹிந்து மக்கள் கட்சி சார்பில், பிராமணர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், நடிகை கஸ்துாரி, 50, கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, 'தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதுாறாக பேசியதாக' சென்னை, மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. கஸ்தூரி மீது சென்னை எழும்பூர், மதுரை திருநகர் போலீஸ் நிலையங்களில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
போலீசார் தேடி வரும் நிலையில், மதுரை ஐகோர்ட் கிளையில் கஸ்தூரி தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்ய, தனிப்படையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஐதராபாத்தில் இருந்த நடிகை கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். விரைவில் அவரை சென்னை அழைத்து வந்து விசாரிக்க இருக்கின்றனர்.