எம்.ஜி.ஆர் குறித்து சர்ச்சை பேச்சு: ஆ.ராசாவுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
எம்.ஜி.ஆர் குறித்து சர்ச்சை பேச்சு: ஆ.ராசாவுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
ADDED : ஜன 31, 2024 11:05 AM

சென்னை: ‛‛ எம்.ஜி.ஆர் குறித்து தி.மு.க.,எம்.பி ஆ.ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சு கடும் கண்டனத்திற்குரியது'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தி.மு.க., எம்.பி., ஆ.ராசா எம்.ஜி.ஆரை தரக்குறைவாக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்து, இ.பி.எஸ்., எக்ஸ் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். இன்றும் மக்கள் மனங்களில் இதயதெய்வமாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற எம்.ஜி.ஆர்., குறித்து தி.மு.க., எம்.பி. ஆ.ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சு கண்டனத்திற்குரியது.
வாடிக்கை
மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசி ஆதாயம் தேடிக்கொள்ள நினைப்பது தான் சுயநலவாதி ஆ.ராசாவின் வாடிக்கை. அவர் பேசிய பாணியில், அவரைப் போல் அல்லாமல் பல வரலாற்று உண்மைகளைப் பேச எங்களுக்கும் தெரியும் என்றாலும், திமுக அளவிற்கு அ.தி.மு.க., என்றும் தரம் தாழாது.
இந்த திமுக ஆட்சியில், எனது தலைமையிலான ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு கருணாநிதியின் பெயரை ஸ்டிக்கர் ஒட்டியும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும் ஜெயலலிதாவின் புகழுக்கு இணையாக கருணாநிதியின் பெயரை என்ன முயற்சித்தும் உயர்த்த முடியவில்லை என்ற ஆற்றாமையில் தான்
ஆ. ராசா போன்றோர் இது போன்ற அவதூறு கருத்துகளைப் பேசுவதாக நான் கருதுகிறேன்.
தகுந்த பதிலடி
இனிவரும் காலங்களிலும் திமுகவினர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், மக்கள் மனங்களில் வாழும் இதயதெய்வங்களின் புகழை எள்ளளவும் குறைக்கமுடியாது. வரும் லோக்சபா தேர்தலில் ஆ.ராசாவிற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். 'கல்லை வடித்தால் அது வெறும் சிலை- அதை மக்கள் தொழுதால் மட்டுமே தெய்வம்'. இவ்வாறு அந்த பதிவில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.