நாய்க்கு துலாபாரம் செலுத்தியதால் சர்ச்சை: மன்னிப்பு கோரினார் நடிகை
நாய்க்கு துலாபாரம் செலுத்தியதால் சர்ச்சை: மன்னிப்பு கோரினார் நடிகை
ADDED : ஜன 22, 2026 07:59 PM

ஐதராபாத்: தெலுங்கானாவில் உள்ள கோவிலில் தனது வளர்ப்பு நாய்க்கு துலாபாரம் செலுத்தியதால் சர்ச்சை உண்டானதை தொடர்ந்து நடிகை டினா ஸ்ரவ்யா மன்னிப்பு கோரியுள்ளார்.
தெலங்கானாவில் உள்ள மேடாரம் ஜதாரா பகுதியில் சம்மக்கா-சாரக்கா அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், பக்தர்கள் தங்களது குழந்தைகளின் நலனுக்கு நேர்த்திக்கடனாக வெல்லத்தை எடைக்கு எடை துலாபாரம் செலுத்துவது வழக்கம். இவ்வளவு பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு சில தெலுங்கு படங்களில் நடித்த இளம் நடிகை டீனா ஸ்ரவ்யா, தனது வளர்ப்புநாயுடன் சென்றார். அங்கு நாய்க்கு துலாபாரம் செலுத்தி உள்ளார். இது குறித்து புகைப்படம் வெளியாக பலத்த எதிர்ப்பு கிளம்பியது. குழந்தைகளுடன் தொடர்பு உடைய பாரம்பரிய நிகழ்ச்சியில் எப்படி வளர்ப்பு நாயை பயன்படுத்தலாம் எனக் கேள்வி எழுப்பினர்.
இவ்வளவு சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, டீனா ஸ்ரவ்யா மன்னிப்பு கோரி விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: 12 வயதான தனது செல்லப் பிராணிக்கு, சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. நாய் குணமடைய வேண்டி அம்மனை பிரார்த்தனை செய்தேன். நாய் குணமடைந்ததும், கோவிலுக்கு சென்று பிரார்த்தனையை நிறைவேற்றினேன். நாய் மீது கொண்ட அன்பு காரணமாகத் தான் செய்தேன். மத வழிபாட்டை அவமரியாதை செய்வதோ அல்லது பக்தர்களின் உணர்வுகளை அவமதிக்கும் எண்ணம் ஏதும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

