மீண்டும் பரவுகிறது கொரோனா 12 நாளில் 17 பேருக்கு பாதிப்பு
மீண்டும் பரவுகிறது கொரோனா 12 நாளில் 17 பேருக்கு பாதிப்பு
ADDED : அக் 13, 2024 08:11 AM
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. ஒரே நாளில் நான்கு பேர் உட்பட, 12 நாட்களில், 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், 2019 டிசம்பரில் கொரோனா தொற்று பரவல் துவங்கியது. அடுத்த ஆண்டில் உச்சகட்ட பாதிப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் கணிசமாக குறைந்தாலும், பல்வேறு நிலையில் தொற்று உருமாற்றம் அடைந்து வருவதால், இன்னமும் ஆங்காங்கே பாதிப்பு தொடர்கிறது.
இதுவரை, 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 38,086 பேர் உயிரிழந்துள்ளனர். சமீபகாலமாக இறப்பு எதுவும் இல்லை.
இந்நிலையில், இந்த மாதம் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, கன்னியாகுமரி, மதுரை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம், 67 பேரிடம் மேற்கொண்ட பரிசோதனையில், சென்னை, சேலம், திருநெல்வேலி, திருப்பூரில் தலா ஒருவர் என, நான்கு பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாதத்தில், 12 நாட்களில், 17 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்; 12 பேருக்கு சிகிச்சை தொடர்கிறது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கொரோனா தொற்றால் பாதிப்பு இருந்தாலும், மரணம் ஏற்படுவது குறைந்து விட்டதால், மக்கள் பீதி அடைய வேண்டாம். அதேநேரம், ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றால்தான் குணப்படுத்த முடியும் என்பதை மறக்கக்கூடாது.
வீட்டு வைத்தியம் பார்ப்பது, சுயமாக மருந்து கேட்டு வாங்கி சாப்பிடுவது என்று அலட்சியமாக இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு வந்தால் காப்பாற்றுவது கடினம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.