உதவி பேராசிரியர்கள் தேர்வு நடவடிக்கை தொடர சேலம் பல்கலைக்கு ஐகோர்ட் அனுமதி
உதவி பேராசிரியர்கள் தேர்வு நடவடிக்கை தொடர சேலம் பல்கலைக்கு ஐகோர்ட் அனுமதி
ADDED : அக் 27, 2024 02:15 AM
சென்னை:'சேலம் பெரியார் பல்கலை உறுப்பு கல்லுாரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்களை, அரசு கல்லுாரிகளில் சேர்க்கலாம். மற்ற காலியிடங்களுக்கான தேர்வு நடவடிக்கையை தொடரலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை, கடந்த மார்ச் மாதம், ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. 4,000 காலியிடங்களை நிரப்புவதற்காக, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனால், தங்களை வெளியேற்ற முயற்சி நடப்பதாகக் கூறி, அறிவிப்பாணையை எதிர்த்து, பெரியார் பல்கலை உறுப்பு கல்லுாரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்கள், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். தங்களை அரசு கல்லுாரிகளில் நியமிக்கவும் கோரினர்.
இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
தேர்வு அறிவிப்பில், மனுதாரர்கள் வகிக்கும் பதவிகளையும் சேர்த்து, அவர்களை போன்றவர்களை பணியில் இருந்து, அரசு வெளியேற்றக் கூடாது. அரசு முன்மாதிரியாக திகழ வேண்டும்.
பல்கலை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உறுப்புக் கல்லுாரிகளில் 63 உதவிப் பேராசிரியர்கள் பணியாற்றுவதாக தெரிவித்தார்.
எனவே, இப்பல்கலை உறுப்புக் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதைப் பொறுத்தவரை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பில் குறுக்கிட வேண்டியதுள்ளது.
மனுதாரர்கள் மற்றும் அவர்களைப் போன்றவர்கள் வகிக்கும் பதவிகளை, மொத்த காலியிடத்தில் சேர்க்கக் கூடாது.
இதர காலியிடங்களைப் பொறுத்தவரை, தேர்வு நடவடிக்கையை தொடரலாம்.
தமிழ்நாடு கல்லுாரி கல்விப் பணிகளில், மனுதாரர்களை சேர்க்க வேண்டும். அரசு கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பணி சலுகைகள் அனைத்தையும், மனுதாரர்களுக்கும் வழங்க வேண்டும்.
எட்டு வாரங்களுக்குள் இதற்கான உத்தரவுகளை, உயர் கல்வித் துறை மற்றும் கல்லுாரி கல்வி இயக்குனர் பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தர விட்டுள்ளார்.