பா.ம.க., கொடி - சின்னம் அன்புமணி பயன்படுத்த தடை கோரிய வழக்கில் கோர்ட் உத்தரவு
பா.ம.க., கொடி - சின்னம் அன்புமணி பயன்படுத்த தடை கோரிய வழக்கில் கோர்ட் உத்தரவு
ADDED : பிப் 26, 2026 03:22 AM

சென்னை: பா.ம.க.,வின் பெயர், சின்னம் மற்றும் கொடியை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு, தேர்தல் கமிஷன், அன்புமணி ஆகியோர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோர் இடையே நிலவும் மோதல் போக்கால், கட்சியில் இருவரும் தனித்தனி அணிகளாக செயல்படுகின்றனர்.
இந்நிலையில், கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த அன்பு மணிக்கு தடை விதிக்கக் கோரி, ராமதாஸ் உச்ச நீதிமன்றம் சென்று போராடினார். சாதகமான தீர்ப்பு கிடைக்காத நிலையில், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
பா.ம.க.,வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி உள்ளது. அந்த தகவலை, அன்புமணி முகவரிக்கு, கடந்த ஆண்டு ஜூலை 30ல் தேர்தல் கமிஷன் அனுப்பி உள்ளது. இது செல்லாது என அறிவிக்க வேண்டும்.
பா.ம.க., தலைவராக அன்புமணியை அங்கீகரித்து, தேர்தல் கமிஷன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அன்புமணியும், அவரது ஆதரவாளர்களும், கட்சி நடவடிக்கைகளில் தலையிடவோ அல்லது கட்சி பெயரை பயன்படுத்தவோ இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தவும் அன்புமணிக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி எம்.தர்மபிரபு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு, தேர்தல் கமிஷனும், அன்புமணியும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை மார்ச் 9க்கு தள்ளிவைத்தார்.

