காலி மது பாட்டில் திரும்ப பெறும் விவகாரம் 'டாஸ்மாக்' ஊழியர் சங்கத்துக்கு கோர்ட் உத்தரவு
காலி மது பாட்டில் திரும்ப பெறும் விவகாரம் 'டாஸ்மாக்' ஊழியர் சங்கத்துக்கு கோர்ட் உத்தரவு
ADDED : ஜூலை 02, 2025 12:42 AM
சென்னை:'டாஸ்மாக்' கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் பணிக்கு, தனியாக ஊழியர்களை நியமிப்பது தொடர்பாக, நிர்வாக இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவை அணுகும்படி, டாஸ்மாக் ஊழியர் சங்கத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி, இந்த திட்டம் மாநிலம் முழுதும் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, கடைகளில் விற்கப்படும் மது பாட்டிலுக்கு கூடுதலாக, 10 ரூபாய் வசூலிக்கப்படும். காலி பாட்டில்களை திரும்ப தரும்பட்சத்தில், அந்த 10 ரூபாய் திருப்பி கொடுக்கப்படும்.
இந்த பணிகளுக்கு, தற்போது டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுவோரை அமர்த்தாமல், தனியாக ஊழியர்களை நியமிக்க கோரியும், காலி பாட்டில்களை வைக்க தனி இடம், உள்கட்டமைப்பு போன்ற வசதிகளை ஏற்படுத்தி தரக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''காலி மது பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் தொடர்பாக, ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
மனுதாரர் சங்கம், அந்த குழுவை அணுகலாம்,'' என்றார். இதை பதிவு செய்த நீதிபதி, மாநில அரசு நியமித்துள்ள குழுவை அணுகும்படி, மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.