கிரைம்: கழுத்தை நெரித்து மகள் கொலை; தந்தையும், மகனும் தற்கொலை
கிரைம்: கழுத்தை நெரித்து மகள் கொலை; தந்தையும், மகனும் தற்கொலை
ADDED : ஜன 27, 2024 07:08 AM

சேலம், மாசிநாயக்கன்பட்டி, இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன், 54. கெமிக்கல் நிறுவனம் நடத்தினார். இவரது மனைவி நிர்மலா, 50. இவர்களது மகன் ரிஷி கேசவன், 30, பி.இ., முடித்து, தந்தையுடன் கெமிக்கல் தொழிலில் ஈடுபட்டார். இவரது மகள் பூஜா, 23, பி.காம்., படித்து, கோவையில் தங்கி, சி.ஏ., படிப்புக்கு தயாராகி வந்தார். இவர் விடுமுறையில், இந்திரா நகரில் உள்ள வீட்டுக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை நிர்மலா, அவரது உறவினருக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு, சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தார். பின் மாலை, 5:30 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது படுக்கையில், பூஜா கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாகி கிடந்தார். அதன் அருகே விட்டத்தில் உள்ள இரும்பு கம்பியில் வேட்டி, சேலையில் வெங்கடேஸ்வரனும், ரிஷி கேசவனும் துாக்கில் தொங்கியபடி பிணமாகி கிடந்தனர்.
நிர்மலா பார்த்து அலறித் துடித்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, மூன்று பேரையும் மீட்டு, அருகில் தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு, மூன்று பேரும் ஏற்கனவே இறந்தது உறுதியானது. அம்மாபேட்டை போலீசார், உடல்களை கைப்பற்றி விசாரித்தனர்.
போலீசார் கூறுகையில், 'கடன் பிரச்னை இருந்ததாக, உறவினர்கள் தெரிவித்தனர். அதேநேரம் காதல் விவகாரம் காரணமா என்றும் விசாரிக்கிறோம்' என்றனர்.
பஸ்சில் தகராறு: பெண் போலீசுக்கு அடி
சென்னை, கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா, 29. இவர், சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் துாய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து, பேருந்தில் சென்றார். அப்போது, அவர் கையில் வைத்திருந்த மீன் பையில் இருந்து, தண்ணீர் கசிந்துள்ளது.
தேனாம்பேட்டை பேருந்து நிறுத்தம் வந்த போது, தனியார் வங்கியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஆயுதப்படை பெண் போலீஸ் மீனா, 23, என்பவர், அந்த பேருந்தில் ஏறினார். அப்போது சங்கீதாவிடம், பலர் பயணிக்கும் பேருந்தில், மீன் தண்ணீர் கசியும்படி செய்யலாமா என, மீனா கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா, வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மீனாவை அடித்து உதைத்ததாக தெரிகிறது. உடனே பேருந்து நிறுத்தப்பட்டு, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மீனா புகார் அளித்தார். இதன்படி, சங்கீதாவை போலீசார் கைது செய்தனர்.
குடிநீரில் மலம் கலந்தவர் கைது
சென்னை, திருவொற்றியூர், கல்யாணி செட்டி நகரைச் சேர்ந்த மோகன், இவர் மனைவி சங்கீதா, 35. ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டில், உறவினரான எல்லப்பன், 45, என்பவர் வசிக்கிறார்.
இந்நிலையில், சங்கீதா திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், தங்கள் வீட்டு தண்ணீர் தொட்டியில், எல்லப்பன் மலம் மற்றும் சிறுநீர் கலந்து வந்துள்ளார். இதன் காரணமாக, அந்த குடிநீரை பருகிய அனைவருக்கும், உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. அவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரியிருந்தார்.
இதுகுறித்து, எல்லப்பனை அழைத்து போலீசார் விசாரித்த போது, குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். தானும், மோகனும் பங்காளி உறவினர்களாவர். எங்களுக்குள் இருந்த முன்விரோதம் காரணமாக, பழிவாங்கும் நோக்கில், இச்செயல்களில் ஈடுபட்டதாக கூறினார்.
இதையடுத்து, திருவொற்றியூர் போலீசார், நேற்று எல்லப்பனை கைது செய்து, அவர் மீது நோய் பரப்புவதற்கு காரணமாக இருந்ததாக, வழக்குப்பதிவு செய்தனர். அப்போது, எல்லப்பனுக்கு வலிப்பு நோய் மற்றும் சற்று மனநிலை பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கான்ட்ராக்டரின் மனைவி படுகொலை; தாலியை பறித்த கும்பலுக்கு வலை
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே நரிக்கல்லுாரை சேர்ந்தவர் ஈஸ்வரன், 55. பொதுப்பணித்துறை கான்ட்ராக்டர். இவரது மனைவி இந்திராணி, 45. இவர்களது மகன் கார்த்திக், 22, புதுச்சேரியில் மருத்துவம் படிக்கிறார். இவர்களது மகள் வளர்மதி, 25, திருமணமாகி கோவையில் வசிக்கிறார்.
இந்நிலையில் ஈஸ்வரனும், இந்திராணியும் அங்குள்ள தென்னந்தோப்பு நடுவே தனி வீட்டில் வசித்தனர். நேற்று காலை வேலை நிமித்தமாக ஈஸ்வரன் வெளியே சென்றார். மதியம் அவர் திரும்பி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்கு வெளியே, தலை சிதைந்த நிலையில் இந்திராணி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அதிர்ச்சி அடைந்த அவர், நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ஓமலுார் டி.எஸ்.பி., சங்கீதா உள்ளிட்ட போலீசார் விசாரித்தனர். மோப்ப நாய் மூலம் சோதனை நடந்தது; கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'வீட்டில் தனியே இருந்த இந்திராணி தலையில் கல்லை போட்டு கொலை செய்து அவரது தாலி சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளை போனதா என, விசாரணை தொடர்கிறது' என்றனர்.
குடுகுடுப்பைக்காரர் 'குறி'; குடும்ப தலைவி தற்கொலை
நாகை அடுத்த நாகூரைச் சேர்ந்தவர் ரமேஷ், 50, வியாபாரி. இவரது மனைவி கலா, 48. இவர்களுக்கு 22 மற்றும் 14 வயதில் மகள்கள் உள்ளனர். இவர்களது வீட்டிற்கு சில மாதங்களுக்கு முன் நள்ளிரவில் வந்து குறி சொன்ன குடுகுடுப்பைக்காரர், 'வீட்டில் உயிர் பலியாகப் போகிறது' என்றாராம்.
அச்சமடைந்த கலா, கணவரிடம் பரிகாரம் செய்ய வேண்டும் என பணம் கேட்டார். மனைவியிடம் இது பணம் பறிக்கும் வேலை என ரமேஷ் பணம் தர மறுத்தார். இதனால் மன வேதனையில் இருந்த கலா, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்குப் போட்டு இறந்தார். நாகூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கம்பியால் தலையில் தாக்கி 60 சவரன் கொள்ளை
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கல்லுவழியைச் சேர்ந்த மரக்கடை உரிமையாளர் சின்னப்பன், 70. இவரது மனைவி உபகாரமேரி, 65. இவர்களது மகன்கள் ஜேக்கப், குமார், மகள் உள்ளார். இரு மகன்களும் துபாயில் உள்ளனர். ஜேக்கப்பின் மனைவி வேதபோதக அரசி, 30, மகள் ஜெர்லின், 12, மகன் ஜோபின், 10, ஆகியோர் சின்னப்பன் வீட்டில் வசிக்கின்றனர்.
நேற்று அதிகாலை 2:00 மணிக்கு மர்ம நபர் இரும்பு கம்பியால் வாசலில் படுத்திருந்த சின்னப்பன் தலையில் தாக்கினார். பின், வீட்டிற்குள் நுழைந்து துாங்கிய மற்ற 4 பேர் தலையிலும் ஒருவர் பின் ஒருவராக கடுமையாக தாக்கினார். இதில் அனைவரும் மயங்கிய நிலையில் பீரோவில் இருந்த 60 சவரன் நகைகளை கொள்ளையடித்து அந்த நபர் தப்பி சென்றார்.
தகவலறிந்த போலீசார், தலையில் கடும் வெட்டுக்காயங்களுடன் மயங்கிய நிலையிலிருந்த ஐந்து பேரையும் மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவத்தை கண்டித்து சிவகங்கை - தொண்டி சாலையில் கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர். எஸ்.பி., அவர்களுடன் பேசி, மறியலை கைவிடச் செய்தார்.
மகனுக்கு வெளிநாட்டில் வேலை; தந்தையிடம் ரூ.14 லட்சம் மோசடி
சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த மீனவர் கண்ணன் 54 என்பவரின் மகன் ஆப்ரிக்காவில் மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரின் வேலை ஒப்பந்தம் முடிவுக்கு வர உள்ளதால் ஆன்லைன் மூலம் வேறு நாடுகளில் அவரின் தந்தை வேலை தேடினார். அப்போது கனடா நாட்டில் அதிக சம்பளத்துக்கு வேலை இருப்பதாக ஆன்லைனில் சிலர் பேசினார்.
வேலை ஒப்பந்த பத்திரம் விசா பாஸ்போர்ட் அனைத்தும் வீட்டுக்கே நேரடியாக வந்து வழங்கப்படும் என கண்ணனிடம் அவர்கள் உறுதி அளித்தனர். அதை உண்மை என நம்பி அந்த மர்ம நபர்கள் கேட்ட 15 லட்சம் ரூபாயை பல தவணைகளாக வங்கியில் கண்ணன் செலுத்தினார். பணம் சென்றடைந்த நிலையில் மர்ம நபரின் தொடர்பு எண்கள் துண்டிக்கப்பட்டன. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கண்ணன் அளித்த புகார்படி சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

