பெண்கள், குழந்தைகள் மீதான குற்ற சம்பவங்கள் மூன்று ஆண்டுகளில் 50.71 சதவீதம் அதிகரிப்பு
பெண்கள், குழந்தைகள் மீதான குற்ற சம்பவங்கள் மூன்று ஆண்டுகளில் 50.71 சதவீதம் அதிகரிப்பு
ADDED : அக் 11, 2025 01:44 AM

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்ற சம்பவங்கள், கடந்த மூன்று ஆண்டுகளில், 50.71 சதவீதம் அதிகரித்துள்ளது.
![]() |
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனினும், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை குறையவில்லை.
![]() |
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த, 2019ல் அ.தி.மு.க., ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை, 5,934 ஆக இருந்தது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், கடந்த மூன்று ஆண்டுகளில், 50.71 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதாவது, பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு, கற்பழிப்பு, கொலை மிரட்டல், கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள், 2021ல் 8,501 ஆக இருந்தது; 2023ல் 8,943 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், 2021 முதல் 2023 வரை, 1,208 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர். 82 பெண்கள் பாலாத்கார முயற்சிக்கு ஆளாகி உள்ளனர்.
குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களும் கணிசமாக உயர்ந்துள்ளன. கடந்த 2019ல், 4,139 ஆக இருந்த குற்றங்களின் எண்ணிக்கை, மூன்று ஆண்டுகளில், 68.36 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2021ல் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள், 6,064 ஆக இருந்தன. இதுவே, 2023ல் 6,968 ஆக அதிகரித்துள்ளது.
இதுபோல போக்சோ வழக்குகளும் அதிகரித்துள்ளன. இவ்வாறு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது, கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:
தமிழக அரசு பெண்களுக்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும், அவர்கள் பாதிப்புக்குள்ளாவது குறையவில்லை.
இதற்கு காரணம், பெரும்பாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள், ஆளும் கட்சி பிரதிநிதிகளே, இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குகின்றனர்.
அவர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட இது வழிவகுக்கிறது.
எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -