விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் போட்டி; முதல் பரிசு ரூ. 5 லட்சம்
விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் போட்டி; முதல் பரிசு ரூ. 5 லட்சம்
ADDED : நவ 26, 2025 01:04 AM

ராமநாதபுரம்: தமிழக வேளாண் துறை சார்பில் திருந்திய நெல் சாகுபடியில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. முதலிடம் பெறும் விவசாயிக்கு ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது.
ஆண்டுதோறும் மாநில அளவில் திருந்திய நெல்சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான பயிர்விளைச்சல் போட்டி வேளாண் துறை மூலம் நடத்தப்படுகிறது.இப்போட்டியில் பங்கேற்று மாநில அளவில் முதலிடம் பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை மற்றும் ரூ.7000 மதிப்பிலான தங்கப்பதக்கமும் அரசால் வழங்கப்படுகிறது.
போட்டியில் பங்கேற்க விவசாயிகள் குறைந்தபட்சம் 2 ஏக்கரில் திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் சாகுபடி செய்தவராக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்களை மட்டுமே சாகுபடி செய்திருக்க வேண்டும். 50 சென்ட்டில் பயிர் அறுவடை மேற்கொள்ளப்படும்.
விவசாயிகள் ரூ.150 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைத்தாரர்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். ஒரு முறை பரிசு பெறும் விவசாயி அடுத்த 3 ஆண்டுக்கு போட்டியில் கலந்து கொள்ள இயலாது. அறுவடை செய்யும் தேதியை 15 நாட்களுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
வெற்றியாளர்களை அறிவிப்பதில் சென்னை வேளாண்மை இயக்குநர் தலைமையிலான மாநில அளவிலான குழுவின் முடிவே இறுதியாகும். டிச., கடைசி வரை பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

