ADDED : ஜூலை 08, 2026 07:16 PM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் எல்.வி.எம்.-,3 (எம்-7) ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த சோதனை ஜூலை 6-ம் தேதி நடத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. கடல் மட்டத்திலேயே முழு திறனில் இன்ஜினை சோதிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட 'நாசில்' பாதுகாப்பு அமைப்பு முதன்முறையாக இந்த சோதனையில் பயன்படுத்தப்பட்டது.
சோதனையின்போது இன்ஜின் முதலில் 45 விநாடிகள் 19.5 டன் உந்துவிசையிலும், பின் 25 விநாடிகள் 22 டன் உந்துவிசையிலும் இயக்கப்பட்டது. இதில் இன்ஜின் மற்றும் 'நாசில்' பாதுகாப்பு அமைப்பு சிறப்பாக செயல்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதையடுத்து இறுதிகட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இந்த இன்ஜின் எல்.வி.எம்.-3 (எம்-7) ராக்கெட்டில் பொருத்தப்பட உள்ளது. இந்த வகை கிரையோஜெனிக் இன்ஜின் ஏற்கனவே சந்திரயான் -2, சந்திரயான்- 3 உள்ளிட்ட 8 எல்.வி.எம்.,-3 ஏவுதல்களில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டத்துக்கும் தகுதி பெற்றுள்ளது.
