விதவை பெண்ணிடம் ரூ.14,000 லஞ்சம் 'மாஜி' தாசில்தார் உட்பட மூவருக்கு சிறை கடலுார் கோர்ட் தீர்ப்பு
விதவை பெண்ணிடம் ரூ.14,000 லஞ்சம் 'மாஜி' தாசில்தார் உட்பட மூவருக்கு சிறை கடலுார் கோர்ட் தீர்ப்பு
ADDED : நவ 15, 2024 05:13 AM

கடலுார்: விதவை பெண்ணுக்கு வருமான சான்றிதழ் வழங்க, 14,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய முன்னாள் தாசில்தார் உட்பட 3 பேருக்கு கடலுார் கோர்ட்டில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த டி.பவழங்குடியை சேர்ந்தவர் மாபூஷா. இவர், கடந்த 2019ம் ஆண்டு என்.எல்.சி., நிறுவன கேண்டீனில் பணிபுரிந்தபோது, உடல் நிலை பாதித்து இறந்தார்.
அதை தொடர்ந்து, அவரது மனைவி கமுர்நிஷா,45; அரசின் வேலை வாய்ப்பு, மகனுக்கு கல்வி உதவித்தொகை பெற இருப்பிடம், வருமானம், ஜாதி மற்றும் ஓ.பி.சி., சான்றிதழ் கேட்டு, ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
சான்றிதழ் வழங்க, 2019ம் ஆண்டு ஆக.29ம் தேதி 14,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கண்ணன், 43; துணை தாசில்தார் அருள்பிரகாசம், 56; இதற்கு உடந்தையாக இருந்த உத்திரவன்னியன்,30; ஆகிய மூவரையும் கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து கண்ணன் அருள்பிரகாசம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கடலுார் தலைமை நீதித்துறை நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் மூவரையும் ஆஜர்படுத்தி, வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை நேற்று முடிந்தது.
விசாரித்த நீதிபதி நாகராஜன், இவ்வழக்கில் தொடர்புடைய முன்னாள் தாசில்தார் கண்ணன், முன்னாள் துணை தாசில்தார் அருள்பிரகாசம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், உத்திரவன்னியனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலரேவதி ஆஜரானார்.