/
செய்திகள்
/
தமிழகம்
/
போன் பேச முடியல, பணம் அனுப்பவும் முடியல சிக்னல் பிரச்னையை தீருங்க; புது திட்டமெல்லாம் வேண்டாம் பி.எஸ்.என்.எல்.,லை திட்டித் தீர்க்கும் வாடிக்கையாளர்கள்
/
போன் பேச முடியல, பணம் அனுப்பவும் முடியல சிக்னல் பிரச்னையை தீருங்க; புது திட்டமெல்லாம் வேண்டாம் பி.எஸ்.என்.எல்.,லை திட்டித் தீர்க்கும் வாடிக்கையாளர்கள்
போன் பேச முடியல, பணம் அனுப்பவும் முடியல சிக்னல் பிரச்னையை தீருங்க; புது திட்டமெல்லாம் வேண்டாம் பி.எஸ்.என்.எல்.,லை திட்டித் தீர்க்கும் வாடிக்கையாளர்கள்
போன் பேச முடியல, பணம் அனுப்பவும் முடியல சிக்னல் பிரச்னையை தீருங்க; புது திட்டமெல்லாம் வேண்டாம் பி.எஸ்.என்.எல்.,லை திட்டித் தீர்க்கும் வாடிக்கையாளர்கள்
ADDED : ஆக 03, 2025 12:55 AM

'சிக்னல்' பிரச்னை, 'நெட்வொர்க்' பிரச்னை போன்ற பல சிக்கல்கள் நிலவி வரும் சூழலில், புதிய திட்டத்தை பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அறிவித்திருப்பது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., 'ரீசார்ஜ்' கட்டணங்களை குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இருப்பினும், பழைய உள்கட்டமைப்புடன் கூடிய 'டவர், நெட்வொர்க், சிக்னல்' பிரச்னைகளால், கடந்த சில ஆண்டுகளாக இந்நிறுவனம் திண்டாடி வருகிறது.
கடந்த ஆண்டு, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 'ரீசார்ஜ்' விலையை திடீரென உயர்த்தியபோது, பலரும் பி.எஸ்.என்.எல்., 'சிம் கார்டு'கள் வாங்க படையெடுத்தனர். அப்போது கிடைத்த வாடிக்கையாளர்களை, இந்நிறுவனம் தக்கவைக்கத் தவறி விட்டது. குறிப்பாக, தமிழகத்தில் '4ஜி சிம் கார்டு'க்கு மாறியவர்களில் பலர், 'சிக்னல்' கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, கவர்ச்சிகரமான புதிய அறிவிப்பு ஒன்றை பி.எஸ்.என்.எல்., நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முழுதும், வெறும் 1 ரூபாய் செலுத்தி, அனைத்து சேவைகளையும் பெற முடியும் என தெரிவித்துள்ளது.
'4ஜி' சேவைகளை, இலவசமாக சோதித்து பார்க்கும் வகையில் இந்த சலுகை திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில், தினசரி 2 ஜி.பி., டேட்டா மற்றும் அளவில்லா அழைப்புகள் உண்டு என்றும், இதற்கான சிம் கார்டும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், பி.எஸ்.என்.எல்., சிக்னல் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில். '1 ரூபாய்க்கு திட்டமெல்லாம் வேண்டாம்; முதலில் சிக்னல் பிரச்னையை சரி செய்யுங்கள்' என, வாடிக்கையாளர்கள் குமுறுகின்றனர்.
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் கூறியதாவது:
நான் பி.எஸ்.என்.எல்., சிம் கார்டை பயன்படுத்தி வந்தேன். சிக்னல் பிரச்னை ஏற்பட்டதால், தனியார் டெலிகாம் நிறுவனத்தின் சிம் கார்டுக்கு மாறினேன். கடந்த ஆண்டு தனியார் டெலிகாம் நிறுவனங்கள் விலை உயர்த்தியதால், குறைந்த கட்டண சேவைகளுக்காக, மீண்டும் பி.எஸ்.என்.எல்., சிம் வாங்கினேன். ஆனால், தற்போதும் சிக்னல் பிரச்னைக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
வீட்டில் உள்ள முதியவர்களுக்காக சிம் கார்டு வாங்கி கொடுத்தால், பேசி கொண்டிருக்கும்போதே இணைப்பு துண்டிக்கப்படுகிறது. மருத்துவமனையில் மருந்துகள் வாங்க பணம் அனுப்ப வேண்டும் என்றால் கூட, சிக்னல் இல்லாததால் அனுப்ப முடியவில்லை.
டெலிகாம் நிறுவனத்தின் அடிப்படை கடமை, தடையில்லா இணைப்பை வழங்குவதே. ஆனால், பி.எஸ்.என்.எல்., இந்த விஷயத்தில் மிக மோசமாக செயல்படுகிறது. வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு அழைத்தாலும், அவர்கள் எந்த ஈடுபாடும் காட்டுவதில்லை.
ஒரு ரூபாய்க்கு சிம் கார்டு வழங்குவது சரிதான். ஆனால், நெட்வொர்க் இல்லாமல் அதை வாங்கி என்ன பிரயோஜனம்?
இவ்வாறு வாடிக்கையாளர் கூறினர்.
தனியார் டெலிகாம் நிறுவனங்களின் ரீசார்ஜ் விலையை ஒப்பிடும்போது, பி.எஸ்.என்.எல்., கட்டணம் குறைவாக தான் உள்ளது. லாப நோக்கம் பார்க்காமல் சேவை கிடைத்து வந்தது. நாட்டில் உள்ள மலை கிராமங்கள் வரை நம்பிக்கையுடன் வாங்கி பயன்படுத்தினர். இப்போது, இந்த நிலைமை மாறிவிட்டது. என்னதான் சிறப்பு சலுகைகள் அறிவித்தாலும், வாடிக்கையாளர்களால் பயன்படுத்த முடியாத நிலையில் தான் அவை உள்ளன. - சத்தியபாலன், முன்னாள் டெலிகாம் ஆலோசனை குழு உறுப்பினர்.
- நமது நிருபர் -