டூவீலரில் கடத்தப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள 40 கிலோ கஞ்சா பறிமுதல்; தப்பிய இருவருக்கு சுங்கத்துறையினர் வலை
டூவீலரில் கடத்தப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள 40 கிலோ கஞ்சா பறிமுதல்; தப்பிய இருவருக்கு சுங்கத்துறையினர் வலை
ADDED : ஜூன் 16, 2025 05:56 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த டூவீலரில் கடத்தப்பட்ட ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 40 கிலோ உயர்ரக கஞ்சாவை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து தப்பிய இருவரை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் தனுஷ்கோடி, மரைக்காயர்பட்டினம், வேதாளை, களிமண்குண்டு, கீழக்கரை, நரிப்பையூர் உள்ளிட்ட தெற்கு கடற்கரை கிராமங்களில் இருந்து கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிகளவில் கடத்தி செல்லப்படுகிறது.
இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக கடத்தி வரப்படும் தங்கத்தை ரோடு மார்க்கமாக திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்கின்றனர். தீவிர கண்காணிப்பையும் மீறி கடத்தல் தொடர்கிறது.
இந்நிலையில் ஹவாலா பணத்தை கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்ல கிழக்கு கடற்கரை சாலை பயன்படுத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் ஒரு வாரமாக கீழக்கரை, ஏர்வாடி, திருப்புல்லாணி, பொக்கரனேந்தல் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனையின் போது சரக்கு வாகனங்கள் உயர் ரக சொகுசு கார்கள் மற்றும் கார்களில் பயணிப்பவர்கள் விபரங்கள் அலைபேசி எண்களை சேகரித்து வருகின்றனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் கீழக்கரை பஸ் ஸ்டாண்டிலிருந்து கடற்கரைக்கு செல்லும் சாலையில் வாகன சோதனையில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்ட போது டூவீலரில் இருவர் சந்தேகத்திற்கு இடமளிப்பதாக சென்றனர்.
சுங்கத்துறையினர் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் கொண்டு சென்ற பார்சலை கீழே போட்டு விட்டு டூவீலரில் வேகமாக தப்பி சென்றனர்.
அதிகாரிகள் பார்சலை சோதனையிட்ட போது உயர் ரக கஞ்சா 40 கிலோ இருந்தது. தப்பி சென்றவர்களை கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் அதிகாரிகள் தேடி வருகின்றனர். கஞ்சாவின் மதிப்பு ரூ.40 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.